
கர்நாடகாவில் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிப்பு
10 percent tax on temples in Karnataka
-
கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
-
இந்த சட்டம் புதியதாக கொண்டுவரப்பட்டதல்ல. பழைய சட்டத்தை திருத்தி இருக்கிறோம். முன்பு 5 சதவீதமாக இருந்ததை, நாங்கள் 10 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம் – பாஜக விமர்சனத்துக்கு முதல்வர் சித்தராமையா பதிலடி

பெங்களூரு, பிப் . 23
கர்நாடகாவில் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று, ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்குப் பிறகு, கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், “ஆளும் காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளது. அரசின் தவறான திட்டங்களால் போதிய நிதி இல்லாமல் தள்ளாடுகிறது. அதனால் கோயில்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தமிழக சட்ட பேரவை 2024-25 : ஜனவரி 2026 ல் கோவை நூலகம் திறப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
கோயில் வருமானத்தில் கோயிலை புதுப்பிக்கவும், பராமரிக்கவும் வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் அரசு கோயில்களிடம் வரி வசூல் செய்து, வேறு காரணங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.” என விமர்சித்தார்.

இதற்கு முதல்வர் சித்தராமையா, “இந்த சட்டம் புதியதாக கொண்டுவரப்பட்டதல்ல. பழைய சட்டத்தை திருத்தி இருக்கிறோம். முன்பு 5 சதவீதமாக இருந்ததை, நாங்கள் 10 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம். அதனை குறைக்க சொல்லாமல், பாஜகவினர் இந்துகளுக்கு எதிரான சட்டம் என விமர்சிக்கின்றனர். தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். வகுப்புவாத அரசியலை செய்து, வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிக்கும் பாஜகவினர் இந்த செயலுக்கு வெட்கப்பட வேண்டும்” என்றார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்