
தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் | பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
cauvery water for tamilnadu | lock down in bangalore today
-
இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கர்நாடக அரசுப் பேருந்துகள் பெங்களூருவில் வழக்கம்போல் இயங்குகின்றன. ஆட்டோ, கால் டாக்சி போன்ற தனியார் போக்குவரத்து வாகனங்களும், உணவகங்களும் வழக்கம் போல இயங்குகின்றன.
பெங்களூரு, செப். 26
தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் | பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் : தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று (செப்.26) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசுப் பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனை சாவடி வரை இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகள், வாகனங்கள் பல ஜூஜூவாடியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டன. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்துக்கு காவிரிநீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
இதைக் கண்டித்து கர்நாடக நீர்பாதுகாப்பு குழு சார்பில் நடத்தப்படும் பந்த் காலை 6 மணிக்குத் தொடங்கியது. முழு அடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி, கல்லூரி, வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டதால் அவை வழக்கம்போல் இயங்குகின்றன.
இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் அக். 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமல்
மற்றபடி, கர்நாடக அரசுப் பேருந்துகள் பெங்களூருவில் வழக்கம்போல் இயங்குகின்றன. ஆட்டோ, கால் டாக்சி போன்ற தனியார் போக்குவரத்து வாகனங்களும், உணவகங்களும் வழக்கம் போல இயங்குகின்றன. தனியார் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. சில நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளன.
நகரில் பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து மைசூரு வங்கி சதுக்கம் வரை கண்டன ஊர்வலம் நடக்கிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், அல்சூர், டேனரி சாலை, ஆஸ்டின் டவுன், விவேக் நகர், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு அடைப்பு போராட்டத்துக்கு பெங்களூரு உணவக உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட 150 அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத, ஆம் ஆத்மி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.