
-
பாரதிய ஜனதாவுக்கு ஒரு எம்.பி.கிடைக்கும் கேரளாவில் ரப்பர் விலையை உயர்த்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
-
வட கிழக்கு மாகாணங்களில் பா.ஜ.க பெற்ற வெற்றி கேரளத்திலும் பிரதிபலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மாநில பாரதிய ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் கூறினார்.
திருவனந்தபுரம், மார்ச். 20
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் கத்தோலிக்க விவசாயிகளின் கருத்தரங்கு மற்றும் பேரணி நடந்தது. இந்த விழாவில் தலச்சேரி கத்தோலிக்க சபையின் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளாவில் ரப்பர் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் ஏராளமான விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ரப்பர் விலையை உயர்த்த வேண்டும்.
பாரதிய ஜனதாவுக்கு ஒரு எம்.பி.கிடைக்கும் கேரளாவில் ரப்பர் விலையை உயர்த்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ரப்பருக்கான விலையை கிலோ ரூ.300 ஆக அதிகரிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : தனியார் பைக் டாக்சிக்கு எதிர்ப்பு ; ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
இப்படி விலை உயர்த்தப்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு கேரளாவில் இருந்து ஒரு எம்.பி. கிடைக்கும். இந்த நடவடிக்கையில் இறங்கினால் அவர்கள் கேரளாவில் கணக்கை தொடங்க முடியும். இவ்வாறு தலச்சேரி கத்தோலிக்க சபையின் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி பேசினார்.
ரப்பர் விவசாயிகள் கருத்தரங்கில் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானியின் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டித்தனர்.
அவர்கள் கூறும்போது எக்காலத்திலும் பாரதிய ஜனதா கேரளாவில் கணக்கை தொடங்க முடியாது என்றனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “தலச்சேரி மறை மாவட்ட பிஷப்பின் கருத்தை வரவேற்கிறேன். இது மாற்றத்துக்கான ஓர் அறிகுறியாகும். விவசாயிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தில் வந்த காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகள் விவசாயிகளை வஞ்சித்துவிட்டன. மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் ரப்பர் விலையை அதிகரித்துவருகிறது. காங்கிரஸ் ரப்பர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. அதனால்தான் அனைத்துத் தரப்பினரும் மத்திய அரசை நெருங்கிவருகிறார்கள். மோடி ஆட்சியை ஆதரிக்கும் அரசு, கேரளத்தில் வந்தால் மட்டுமே மத்திய அரசின் அனைத்து வளர்ச்சிகளும் முழுமையாகக் கிடைக்கும். ஏற்கனவே ஒரு விழாவில் பேசிய பிரதமர் மோடி கேரளாவிலும் பாரதிய ஜனதா கணக்கை தொடங்கும் காலம் வரும் என்று கூறியிருந்தார். அந்த காலம் வந்துவிட்டது. வட கிழக்கு மாகாணங்களில் பா.ஜ.க பெற்ற வெற்றி கேரளத்திலும் பிரதிபலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மாநில பாரதிய ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.