அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Chief Minister M.K. Stalin orders reading of the Preamble of the Constitution in government offices, schools, and colleges
- தமிழக அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
- பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப்போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு
சென்னை, நவ.26
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி இந்தியாவை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழக அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி, அரசியலமைப் பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்கச் செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று (நவ.26)காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப்போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்