தென்கொரியாவில் முதல் உலகளாவிய திருக்குறள் மாநாடு :
10 நாடுகளில் இருந்து 100 அறிஞர்கள் பங்கேற்பு – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு
First Global Thirukkural Conference in South Korea
100 scholars from 10 countries participate – CM Stalin commends
-
மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும், கேடயமும் வழங்கப்பட்டது
-
சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா ரூ.6,000 பரிசுத் தொகை, 12 கட்டுரைகளுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகை
சியோல், நவ. 12 –
தென்கொரியா வரலாற்றில் முதல் முறையாக “உலகளாவிய திருக்குறள் மாநாடு” (ITCSK 2025) சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி இம்மாநாடு நடைபெற்றது.
தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) சார்பில் “காலத்தை கடந்த உண்மைகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும், கேடயமும் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை அறிமுகப்படுத்தியதற்காகவும், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ஆறு இந்திய மாணவர்களுக்கு தென்கொரியாவில் ஆராய்ச்சி படிப்பிற்கு வாய்ப்பு வழங்கியதற்காகவும் இப்பாராட்டு அளிக்கப்பட்டது. மாநாட்டில் தமிழ் இலக்கிய சேவையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் 156 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய டாக்டர் வி.ஜி. சந்தோஷத்திற்கு “திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
37 நூல்கள் படைத்த புதுமைத்தேனீ மா. அன்பழகனுக்கு “உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது” வழங்கப்பட்டது. Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், ஜங்கனம் கிம், யாங் கீ மூன், பேராசிரியர் ப. அருளி ஆகியோருக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா ரூ.6,000 பரிசுத் தொகையும், 12 கட்டுரைகளுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம் “திருக்குறள் மற்றும் சமூக நீதி” என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன், முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா), Dr. Alexis Devaraj (பிரான்ஸ்), தென்கொரியா ஹன்யங் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிபாலன், கவிஞர் சகாய டர்சியூஸ் பீ, முனைவர் D. ஞானராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர்.
தென்கொரியாவில் “தமிழ் பண்பாட்டு மையம்” நிறுவுதல், இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திட்டம், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்குதல் (MoU) ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்-கொரிய கலாச்சார பரிமாற்றம், தமிழ் மொழி வகுப்புகள், திருக்குறள் ஆய்வுகள், ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்துதல் போன்ற செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மாநாட்டு அமைப்பாளர்கள் பேராசிரியர் S. ஆரோக்கியராஜ் (தலைவர்), கவிஞர் சகாய டர்சியூஸ் பீ (துணைத் தலைவர்), முனைவர் D. ஞானராஜ் (செயலாளர்), சாந்தி பிரின்ஸ் (மக்கள் தொடர்பு) ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பேராசிரியர் சந்திரசேகரன், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள், தமிழ், கலை-அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு, முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர். அருட் தந்தை இன்பராஜ் மைகேல், பேராசிரியர் பலமுரளிகிருஷ்ணன், ஹேமநாதன், ஸ்வாமிநாதன், பிரான்சிஸ் ஜெவெல்சன், விபின் ஜியோ, ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், ஆரோக்கியராஜ், சாருமதி, சுமத்திரா விக்னேஷ் ராம், ஆனந்த் மற்றும் துரை ஆகியோர் மாநாட்டு சிறப்பு குழுவினராக செயல்பட்டனர்.
மாநாட்டிற்கு பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவை வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.