சியோலில் முனைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் ” தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு” தொடக்கம்

சியோலில் முனைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் ” தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு” தொடக்கம்

Inauguration of “South Korea Tamil Research Association” under the leadership of Dr. Arokiyaraj in Seoul

சியோல், அக். 09
தென்கொரியா தலைநகர் சியோலில், கடந்த 5ந்தேதி தமிழ்-கொரியா கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், மொழி, கடல் வணிகம் மற்றும் இரு நாட்டு தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்வகையில் “தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு” துவங்கப்பட்டது.

south korea

இந்த அமைப்பின் தலைவராக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவரும், சியோல் செஜாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் செ.ஆரோக்கியராஜ் தேர்வுசெய்யப்பட்டார். செயலாளராக முனைவர் ஞானராஜ், துணை தலைவராக சகாய டார்சியஸ் தேர்வு செய்யப்பட்டனர்.

south korea

விழாவில் தமிழ் – கொரியா கலாச்சார அடையாளங்களை பிரதிபலிக்கும் லச்சினம் (லோகோ) அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சியோல் பல்கலைகழக மாணவர்கள், வடஇந்தியர்கள், கொரியாவாழ் தமிழர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் மகாலிங்கம், துப்புரவு தொழிலாளர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் பாதுகாப்பற்ற வேலை செய்யும் தொழிலாளர்களின் மனஅழுத்தம், நல்வாழ்வு பற்றிய ஆய்வுகள் குறித்து பேசினார்.

south korea

தென்கொரிய சமூக மாற்றம் மற்றும் கிறிஸ்தவம் குறித்து பேராசிரியர் ஞானராஜ் விளக்கினார்.

south korea

கொரியா – தமிழ் மொழியியல் மற்றும் கடல்சார் தொடர்புகள் குறித்த ஆய்வுகள் பற்றி முனைவர் செ.ஆரோக்கியராஜ் பேசினார்.

“தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA)” பின் கொள்கைகள் குறித்த தீர்மானங்கள் வெளியிடப்பட்டது.
அதன் விவரம் வருமாறு :-

1. தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையே நல்லதொரு நட்புறவை உருவாக்கும் நோக்கில் இரு கலாச்சாரங்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள் போன்றவற்றை உலக கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து புரிந்துகொள்ளுதல்.

2. இந்தியா (தமிழ்நாடு) மற்றும் கொரியாவுக்கு இடையிலான மொழியியல் மற்றும் பண்டைய கடல்வழி வணிகம் குறித்து ஆராய்தல்.

3. சமூக, அறிவியல் மற்றும் கலாச்சார ரீதியாக தொடர்புடைய தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளை நடத்துதல்.

4. கல்வி-சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மற்றும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்குதல்.

5. கொரிய-தமிழ் ஆராய்ச்சி களஞ்சியமாக செயல்படுதல்.

6. கொரியாவில் வாழும் தமிழர்கள் அறிவுசார் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு மன்றமாக செயல்படுதல்.

7. பெரும்மதிப்புமிக்க சாதனைகள் புரிந்தவர்களைப் பாராட்டி அவர்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் வழங்கி மதிப்பளித்தல் உள்ளிட்டவை தீர்மானத்தில் இடம்பெற்றன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்