ஆளுனரிடம் உரிமை கோரிய த.வெ.க. : பெரும்பான்மை இல்லை, ஆளுநர் மவுனம்; விஜய் நாளை பதவியேற்பதில் சிக்கல்?
TVK Stakes Claim with Governor: No Majority Proof, Governor Remains Silent; Is Vijay’s Swearing-in Tomorrow in Jeopardy?
சென்னை, மே. 06
சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 118 எம்எல்ஏக்கள் குறித்த தகவலை ஆளுநருக்கு, தவெக அளிக்காததால், திட்டமிட்டபடி நாளை (மே 7) விஜய் முதல்வராக பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு விஜய் நேற்று இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், நடந்து முடிந்த தேர்தலில் தவெக 35% வாக்குகளை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆட்சி அமைக்க ஆதரவு தருபவர்கள் யார் யார் என்பது குறித்த விவரத்தை அளிக்குமாறு விஜய்க்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், “பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அது குறித்த விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படையில் எனது செயல்பாடு இருக்கும்” என்று அவர் கூறி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று மாலை 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார்.
எனினும், அதில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் நேற்று கோரி இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் தனது ஆதரவை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. அக்கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனினும், மற்ற மூன்று கட்சிகளும் தங்கள் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. அக்கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களை வைத்துள்ளனர். அவற்றின் ஆதரவு உறுதியாகுமானால் விஜய் பெரும்பான்மை பலம் இருப்பதற்கான ஆதாரத்தை ஆளுநருக்கு அளிக்க முடியும். ஆனால் திருமாவளவன், விஜய்க்கு ஆதரவு இல்லை என சூசகமாக மறுத்திருக்கிறார்.
இதனால், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டபடி நாளை விஜய் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.
