மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி | முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
modi regime is a weak regime | chief minister m.k. stalin
-
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும், இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
-
2014-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் அடக்குமுறைகள் இன்னும் அதிகமாகியிருக்கிறது.
ராமநாதபுரம், ஆக. 18
“பிரதமர் மோடி ஆட்சியிலும் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரவேச் செய்கிறது என்றால் என்ன அர்த்தம்? மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்” என்று தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மீனவர் நல மாநாடு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீனவர் நல மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 9,615 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாநாட்டில் முதல்வர்
மாநாட்டில் முதல்வர் பேசியது: “தமிழ்நாடு மாநில மீனவர் கூட்டுறவு நல இணையமும், மீனவ சங்கங்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவ சங்கங்களை இணைத்துக்கொள்ள மாட்டார்கள். மீனவர்கள் மாநாடக இருந்தால், அதில் அரசு அதிகாரிகள் இடம்பெற மாட்டார்கள். ஆனால், நாங்கள் இரு தரப்பையும் இணைத்து இந்த மாநாட்டை அமைச்சர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தாலமிய நிலவியல் கையேடு
1076 கி.மீ தொலைவுக்கு மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் தமிழகம். நமது கப்பல்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே சென்றதை தாலமிய நிலவியல் கையேடு சொல்லிக் கொண்டிருக்கிறது. கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வல்லம், மிதவை, ஓடம், தெப்பம், டிங்கி, பட்டுவா, அங்கம், அம்பி, திமில் என்று வகைவகையாக கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள்.
நம்மை சூழந்துள்ள அனைத்துக் கடல்களிலும் தமிழர்கள் கலம் செலுத்தியிருக்கிறார்கள். உலகப் பயணிகள் பலரும் தமிழகத்தை நோக்கி வந்தார்கள். அந்தவகையில், தமிழகத்தை உலகத்தோடு இணைத்தது கடல்.
மாநிலத்துக்குள் இருக்கும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம். ஆனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இன்னும் பிரச்சினையாகவே இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும், இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இது தமிழக மீனவர்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சினையாக இது இருந்து வருகிறது.
பாஜக ஆட்சியில் அடக்குமுறைகள்
இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எப்போது துவங்கியதோ, அப்போதிலிருந்தே தமிழக மீனவர்களைத் தாக்குவதை இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்பிறகாவது தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடிகிறதா என்றால், அதுவும் இல்லை. அதே கைது, தாக்குதல், சித்ரவதை தொடரத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக 2014-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் அடக்குமுறைகள் இன்னும் அதிகமாகியிருக்கிறது.
படகுகள் இலங்கை அரசின் உடைமையா ?
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் பறிப்பு
மீனவர்கள் கைது, தாக்குதல், சிறைச்சாலை என்பதை தாண்டி, மீனவர்களினுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகமாகியிருக்கிறது. மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை தருவதில்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும் வலையும்தான். படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும் இலங்கை அரசின் வழக்கமாக உள்ளது.
கடல் தாமரை போராட்டம்
இத்தகைய படகுகள் இலங்கை அரசின் உடைமையாகும் என்று சொல்லுமளவுக்கு இப்போது நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாம்பனில் பாஜக சார்பில் கடல் தாமரை என்ற போராட்டம் நடத்தப்பட்டது.
தேர்தல் பிரச்சாரம்
அதேபோல், தேர்தல் பிரச்சாரத்தின் போது இங்கு வந்த பிரதமர் மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர் ஒருவர்கூட இலங்கை கடற்படையால் துன்பப்படமாட்டார். தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரு நாட்டு மீனவர்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
இதையும் படியுங்கள் :கேரளாவில் ஓணம் பரிசு பொருட்கள் தொகுப்பு | முதல்- அமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள்
2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? 2015ம் ஆண்டும் தாக்குதல் நடந்தது. 2016ம் ஆண்டும் தாக்குதல் தொடர்ந்தது. 2017ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்யக்கூடிய நிலையிலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது.
இலங்கை கடற்படையினர் தாக்குதல்
ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான், அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். 2020-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்கள் நடத்தியுள்ளனர். இதில் தமிழக மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 604 மீனவர்களையும், 24 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது.
மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி
இந்த ஆண்டு மட்டும் 74 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இதில் 59 பேரை விடுவித்துள்ளனர். ஆனால், 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம்தான் இன்னும் இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம். மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்” என்று முதல் அமைச்சர் பேசினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.