Home இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து ; குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் | உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து ; குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் | உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து ; குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் | உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து ; குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் | உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Repeal of Article 370  to the state of Jammu and Kashmir; The action of the President will go | Supreme Court verdict

காஷ்மீர், டிச. 11

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

சட்டப்பிரிவு 370

ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.
இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
அம்மாநிலத்தின் ‘நிரந்தர குடியாளர்கள்’ யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.

‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அரசியலமைப்பின் 1 மற்றும் 370 வது பிரிவுகளில் இருந்து இது தெளிவாகிறது’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

“சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு இடைக்கால செயல்முறையை முடிக்க உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இது ஒரு தற்காலிக ஏற்பாடு, எனவே இது அரசியலமைப்பின் 21 வது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு உள் இறையாண்மை இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் முன்வைத்த விவரங்கள் பின்வருமாறு

ஒருங்கிணைப்பிற்காகவே 370 (3) கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட பிறகு 370 (3) ஐப் பயன்படுத்த முடியாது என்ற இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் இது அரசியலமைப்பு ஒருங்கிணைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
குடியரசுத் தலைவர் முடிவுகளின் மீதான மேல்முறையீடுகளை நீதிமன்றம் கேட்க முடியாது. இருப்பினும், எந்த முடிவும் நீதித்துறை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் 370(1)(d) இன் கீழ் எடுக்கப்பட்ட பல அரசியலமைப்பு உத்தரவுகள், மத்திய அரசும், மாநிலமும் இணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. இந்த செயல்முறை மூலம் ஜம்மு காஷ்மீரில் இந்தியா செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒருங்கிணைக்கும் செயல்முறை கடந்த காலங்களில் நடந்து கொண்டிருந்ததை இது காட்டுகிறது, எனவே இந்த முடிவை குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக பார்க்க முடியாது. எனவே, குடியரசுத் தலைவரின் முடிவை நாங்கள் சட்டப்பூர்வமாக்குகிறோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறும் பிரிவு 1 தவிர, ஜம்மு காஷ்மீருக்கு வேறு எந்தச் சட்டமும் பொருந்தாது. ஜம்மு காஷ்மீருக்கு என தனி அரசியலமைப்பு உள்ளது.

அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் மாநிலத்திற்குப் பொருந்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இதற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம்.

வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு என மூன்று துறைகள் தொடர்பாக மட்டுமே இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீரின் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் சட்டப்பிரிவு 370ல் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த திருத்தங்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வரம்புகளையும் சட்டப்பிரிவு 370 கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவரால் மட்டுமே இந்த விதியை திருத்த முடியும் என்றும் சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை 1951-இல் உருவாக்கப்பட்ட 75 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சபையால் எப்படி இந்திய அரசியலமைச் சட்டம் உருவாக்கப்பட்டதோ, அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான அரசியலமைப்பை ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை உருவாக்கியது. 1956 நவம்பரில், மாநிலத்தின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபை நிறுத்தப்பட்டது.

காஷ்மீர் குறித்த பாஜகவின் திட்டத்திற்கு நீண்ட காலமாகவே தடையாக இருந்தது சட்டப்பிரிவு 370தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்குவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ச்சியாக கூறி வந்தது.

சட்டப்பிரிவு 370 உடன் கூடுதலாக 1954 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 35-A சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு அரசு வேலை, மாநிலத்தில் சொத்து வாங்குதல் மற்றும் மாநிலத்தில் வசித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிறப்பு உரிமைகளை இந்த சட்டப்பிரிவு வழங்கியது.

இந்த வழக்கில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்களில் சிவில் சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

மனுதாரர்களில் சிலர் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம், தேசிய மாநாட்டுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அக்பர் லோன் மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் உரையாசிரியர் ராதா குமார் உள்ளிட்டோர் ஆவர்.

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

மனுதாரர்களின் கூற்றுப்படி, பிரிவு 370 ஒரு நிரந்தர ஏற்பாடு. அதில் எந்த மாற்றமும் செய்வதற்கு 1956-இல் கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் தேவை. இந்த பிரிவை ரத்து செய்தது சுதந்திரத்தின் போது ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியாவிற்கும் இடையே போடப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்திற்கு (Instrument of Accession) எதிரானது என வாதத்தில் கூறப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. அதேசமயம் ஜம்மு காஷ்மீருக்கு என தனி இறையாண்மை மற்றும் தன்னாட்சி இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

இது மக்களின் விருப்பத்திற்கு மாறாக செய்யப்படும் அரசியல் செயல் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

அரசியல் நிர்ணய சபையை சட்டப் பேரவையாக மாற்ற முடியாது ஏனென்றால் நிர்ணய சபைக்கும் சட்டப்பேரவைக்கும் அவை செய்யக்கூடிய பணிகளில் வேறுபாடு உள்ளது என அவர்கள் கூறினர்.

குடியரசுத் தலைவர் ஆட்சியில் மாநிலம் இருந்தபோது இந்தத் திருத்தத்தை செய்திருக்க முடியாது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஏனென்றால், சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி, ​​சட்டப் பேரவையை மாற்றியமைத்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் என மனுதாரர்கள் வாதிட்டனர்.

இதையும் படியுங்கள்: டிச.29 ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு | தொல்.திருமாவளவன்

மேலும், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறும் போது அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடுகிறது. எனவே, ஒரு மாநிலத்தின் சுயாட்சியைக் குறைத்து, கூட்டாட்சித் தன்மையை பாதிக்கும் என்பதால், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

370வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடு என்று மத்திய அரசு வாதிட்டது. அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதால், சட்டமன்றம் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பிரிவை ஒருபோதும் திருத்த முடியாது என மத்திய அரசு கூறியது.

சட்டப்பிரிவு 370 ரத்து நடவடிக்கை ஜம்மு காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது என்று மத்திய அரசு கூறியது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாகப் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்துவதில்லை. இதனால் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக அரசு வாதிட்டது.

மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, ​​மத்திய அரசோ அல்லது ஆளுநரோ பிறப்பிக்கும் உத்தரவுகள், மாநில சட்டமன்றம் இயற்றும் உத்தரவுகளுக்குச் சமம் என்று அரசு கூறியது. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது சிறப்பு அந்தஸ்தை மாற்றியது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல என அரசு தெரிவித்தது.

மத்திய அரசிற்கு மாநிலங்களை மறுசீரமைக்க பரந்துபட்ட அதிகாரம் உள்ளது என்றும், மத்திய அரசு ஒரு மாநிலத்தின் பெயர், பகுதி, எல்லைகளை மாற்றியமைக்கலாம் மற்றும் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கலாம் என்றும் மத்திய அரசு வாதிட்டது. சட்டம்-ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.

சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்பட்டது என்றும் எனவே, இது ஒரு நன்மை பயக்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.