Tuesday, March 3, 2026
Google search engine
Homeசெய்திகள்ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் | உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் | உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் | உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

will not allow re-opening of Sterlite plant | Tamil Nadu Government Argument in Supreme Court

  • மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்

  • கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு கடுமையான பாதிப்பை இந்த ஆலை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி, ஆக .22

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் :கடந்த 22 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இதுதொடர்பான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆலை நிர்வாகம் தரப்பில் ரூ.4 ஆயிரம் கோடி ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலையை திறக்க காலதாமதம் செய்தால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் பிரதான வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்

இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களும் ஆக.22 மற்றும் ஆக.23 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சுற்றுச்சூழலுக்கு சிவப்பு எச்சரிக்கை
அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததால் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு கடுமையான பாதிப்பை இந்த ஆலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் ஆய்வு

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கையை நீர்த்துப்போகச் செய்ய முடியாது. தொடர்ந்து இந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கோரியுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை 22 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த 22 ஆண்டுகளும் ஆலையின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

வரையறை செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே ஆலையின் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் இருந்து வந்துள்ளதை அது உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையின் இயக்க உரிமையை தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளது. நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதி விசாரணைக்காக காத்திருக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments