
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
6 people killed in stampede in Tirupati
-
விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி, ஜன.9
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல் கிடைத்துள்ளது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : எச்எம்பி வைரஸ் : வீரியமற்றது; பாதித்தவர் தொட்டதால் தொட்டால் பரவுமா?
பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். எனது எண்ணமெல்லாம் தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்து வாடுபவர்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வர உள்ளதாக தகவல். அவர் காயமடைந்தவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனைவியை இழந்த கணவர், “இரவு 7.30 மணி முதல் டோக்கன் பெற கூட்டம் அதிகம் கூடி இருந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் மக்கள் பல்வேறு திசைகளில் முண்டியடித்து ஓடினர். எனது மனைவிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்தேன். அப்போது அங்கிருந்த காவல் அதிகாரியிடம் கேட்ட போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நான் அங்கு சென்று பார்த்தேன். எனது மனைவி சிகிச்சைக்கான வார்டில் இல்லை. பிறகு தான் அவர் உயிரிழந்த விவரம் எனக்கு தெரிய வந்தது” என ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்