மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டம் : மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடக்கம்
Mumbai Dharavi Redevelopment Project: Work begins on resettling residents in other areas
-
தாராவி மறு சீரமைப்பு திட்ட கூட்டு நிறுவனம்,அதானி குழுமம் 80 சதவீத பங்குகளையும் மகாராஷ்டிர அரசின் குடிசை மறுவாழ்வு ஆணையம் 20 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
-
தாராவியில் வசிக்கும் மக்களுக்கு 350 சதுர அடியில் நவீன வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட உள்ளன. கட்டுமான காலத்தில் தற்காலிகமாக இடம்பெயரும் தாராவி மக்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.
மும்பை, ஜூன். 13
மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்காக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாராவி உள்ளது. அங்கு சுமார் 2.39 சதுர கி.மீ. பரப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆவர்.
இந்த சூழலில் மகாராஷ்டிர அரசு சார்பில் தாராவி மறுசீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தின் மூலம் தாராவி முழுமையாக மறுசீரமைக்கப்பட உள்ளது.
இதற்காக தாராவி மறு சீரமைப்பு திட்ட கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் அதானி குழுமம் 80 சதவீத பங்குகளையும் மகாராஷ்டிர அரசின் குடிசை மறுவாழ்வு ஆணையம் 20 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.95,790 கோடி ஆகும்.
இந்த திட்டத்தின்படி தாராவியில் வசிக்கும் மக்களுக்கு 350 சதுர அடியில் நவீன வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட உள்ளன. கட்டுமான காலத்தில் தற்காலிகமாக இடம்பெயரும் தாராவி மக்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது.
இந்த சூழலில் மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்காக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக செக்டர் 6, சாகுநகர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களை வேறு பகுதிகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அங்கிருந்து சுமார் 900 பேர் படிப்படியாக வெளியேற்றப்பட உள்ளனர். இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தாராவி பகுதிகளில் இருந்து வீடுகளை காலி செய்ய ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.22,000 வாடகை படி வழங்கப்பட உள்ளது. பெரிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ரூ.30,000 வரை வாடகை படி வழங்கப்படும்.
தாராவியில் கட்டப்படும் புதிய வீடுகளில் மக்கள் குடியேறும்வரை மாதந்தோறும் வாடகைபடி வழங்கப்படும். வரும் 2028-ம் ஆண்டுக்குள் தாராவியில் 10,000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.
வரும் 2032-ம் ஆண்டு ஜனவரிக்குள் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமன்றி பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், குழந்தைகள் நல மையங்கள், வணிக வளாகம், தொழிற்பூங்கா உள்ளிட்டவையும் தாராவியில் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







