செய்திகளை படியுங்கள்; உண்மையைக்கண்டுபிடியுங்கள்; நடவடிக்கை எடுங்கள் – முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

செய்திகளை படியுங்கள்; உண்மையைக்கண்டுபிடியுங்கள்; நடவடிக்கை எடுங்கள் – முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Read the news; uncover the truth; take action – Appeal by DMK President M.K. Stalin

  • நான் சிறையில் நிம்மதியாக தெம்போடு திராணியோடு இருந்தேன் என்று சொன்னால், அதற்கு ஆர்க்காட்டார் காரணமாக இருந்தார்

  • ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது

சென்னை, ஜூன். 17

“நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவர் அதையெல்லாம் படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை – வானகரத்தில் இன்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமியின் பேரனும், திமுக எம்.பி கலாநிதி வீராசாமியின் மகனுமான சித்தார்த் – ஆஷ்ரயா இணையரின் திருமணத்தை நடத்திவைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “1976-இல் நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்த போது ஆர்க்காட்டார் எங்களோடு இருந்தார்கள். சிட்டிபாபு எந்த அளவிற்கு கொடுமைகளுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர் மறைவதற்கு என்ன காரணம் என்பதும் உங்களுக்குப் புரியும். அதைப்பற்றி எல்லாம் இந்த மணவிழா நிகழ்ச்சியில் நாம் பேச விரும்பவில்லை
அப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் சென்னை சிறைச்சாலையில் நடைபெற்றது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் சிறையில் நிம்மதியாக தெம்போடு திராணியோடு இருந்தேன் என்று சொன்னால், அதற்கு ஆர்க்காட்டார் காரணமாக இருந்தார் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோன்று ஆர்க்காட்டார் இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் பட்ட அந்தக் கொடுமையின் காரணத்தினால்தான் அந்த நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். எனவேதான் “வைரம் பாய்ந்த ஒரு தொண்டன்” ஆர்க்காட்டார் என்று கருணாநிதி பலநேரங்களில் சொல்லியிருக்கிறார்.
ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. ஆனால் 75 ஆண்டு காலம் கொண்ட கொள்கைக்காக லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் இன்றைக்கு எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் ஆட்சியைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சோசியல் மீடியா இன்றைக்கு எந்த அளவுக்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த சோசியல் மீடியா ஒரு அளவுதான்; நாளடைவில் அதெல்லாம் மறைந்து போகத்தான் போகிறது.
இன்றைக்கு சோசியல் மீடியாவை பார்க்கிறபோது, ‘கோட்’ போட்டு வந்தார்; கையில் டிஃபன் கேரியர் எடுத்து வந்தார்; வாட்ச் கட்டி வந்தார்; செஸ் விளையாடினார்; இன்றைக்கு கோட்டு போடவில்லை; பட்டு சட்டை -வேஷ்டி-யில் வந்தார். இதெல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. அவைகள் எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள். படித்து, அதில் இருக்கும் உண்மையைக் கண்டுபிடிங்கள். அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles