தூத்துக்குடியில் நேற்று திடீர் சுழல் காற்று; 6 பேர் காயம்
Sudden Whirlwind in Thoothukudi; 6 Injured
-
வாகைகுளம் விமான நிலையம் அருகே அமைந்துள்ள சுங்கச் சாவடியின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்தன.
-
இந்த சுழல் காற்று மிகவும் அபூர்வமான நிகழ்வு என வானியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தூத்துக்குடி, ஜூன். 22
தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் நேற்று திடீர் சுழல் காற்று வீசியது. இதில் சுங்கச்சாவடி மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் புதுக்கோட்டை, வாகைகுளம் பகுதிகளில் மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பலத்த சுழல் காற்று வீசியது. வாகைகுளம் விமான நிலையம் அருகே அமைந்துள்ள சுங்கச் சாவடியின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்தன.
மேலும், அருகே அமைந்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவிலும் மேற்கூரை தகரங்கள் காற்றில் பறந்துஅங்கிருந்தவர்கள் மீது விழுந்தன. இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆறுமுகத்தாய், சோனிக்கா, ஆகாஷினி, தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், மோகன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். மேலும், விமான நிலைய வளாகத்திலும் சுழல் காற்று வீசியது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை வீசிய இந்த காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சுழல் காற்று மிகவும் அபூர்வமான நிகழ்வு என வானியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேகம் சுழன்று கீழே இறங்குவதுபோல சுழல்காற்று வீசியது. இந்தகாட்சியைக் கண்ட சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது பேசுபொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







