அறிவியல் அடிப்படையில் நெல் நிரந்தர சேமிப்பு கிடங்கு வழக்கு ; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Case regarding scientific paddy storage facilities: High Court orders Tamil Nadu Civil Supplies Corporation Chairman to respond
-
சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கோரிக்கை
-
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை, வெள்ளம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்ட கோரிக்கை
மதுரை, ஜூன். 24
அறிவியல் அடிப்படையில் நெல் நிரந்தர சேமிப்பு கிடங்கு வழக்கு ; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு: அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையில் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையை சேர்ந்த அமிர்த ராஜ ஹமீதுதீன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் அடிப்படையில் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்காக நிரந்தர சேமிப்பு கிடங்குகளை கட்ட உத்தரவிட வேண்டும்.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை, வெள்ளம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், இது போன்ற சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் இடம் மட்டுமல்ல, பல மாவட்டங்களில் இந்த பிரச்சினை உள்ளது. ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது. பெரும் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மனு தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







