தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி
AIADMK to hold massive protest condemning the TVK government – Edappadi Palaniswamy
-
நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தாடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது
-
குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 சனிக் கிழமை காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை, ஜூலை.13
பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; போதைப் பொருட்கள் தங்குதடையின்றி புழக்கம்; சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், கடந்த திமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் பரிதவித்தனர். இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தாடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.
அண்மையில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 சனிக் கிழமை காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும்; திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கூ.சூ. சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெறும். பெண்கள் நலனையும், மக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.








