Sunday, March 22, 2026
Google search engine
Homeஇந்தியாமூளையை திண்ணும் அமீபா வைரஸ் தாக்கி உயிர் பிழைத்த கேரளா சிறுவன் : தடுப்பது எப்படி?...

மூளையை திண்ணும் அமீபா வைரஸ் தாக்கி உயிர் பிழைத்த கேரளா சிறுவன் : தடுப்பது எப்படி? -மருத்துவர் அறிவுரை

மூளையை திண்ணும் அமீபா வைரஸ் தாக்கி உயிர் பிழைத்த கேரளா சிறுவன் : தடுப்பது எப்படி? -மருத்துவர் அறிவுரை

Kerala boy survives brain-eating amoeba virus: How to prevent it? -Physician advice

  • நோய்த்தொற்று ஏற்பட்ட 9 மணி நேரம் முதல் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் அது கண்டறியப்பட்டதுதான் என்று, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கபபட்டுள்ளது.

  • நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria Fowleri) என்ற அமீபாவால் இந்த நோய்த் தொற்று ஏற்படும். இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான 97% உயிரிழக்கின்றனர்.

கோழிக்கோடு, ஜூலை. 30

சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு பொது விழிப்புணர்வுப் பிரசாரத்தால், கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா தாக்கத்திலிருந்து தப்பியுள்ளார். அஃப்னான் ஜாசிம் என்ற அந்த மாணவர் இந்தக் கிருமியிடமிருந்து உயிர் பிழைத்த ஒன்பதாவது நபர் ஆவார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து 22 நாட்களுக்குப் பிறகு அஃப்னான் ஜாசிம் வீடு திரும்பியுள்ளார். அவர் உயிர் பிழைக்க காரணம், இந்தக் கிருமித் தொற்று இருந்தது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டது தான். இதேபோல் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டதால், இதுவரை உலகில் எட்டு பேர் ‘ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ (PAM) என்ற இந்தக் கொடிய நோயிலிருந்து தப்பித்திருக்கின்றனர்.

amoeba virus
amoeba virus

நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria Fowleri) என்ற அமீபாவால் இந்த நோய்த் தொற்று ஏற்படும். இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான 97% உயிரிழக்கின்றனர். 1971 மற்றும் 2023-க்கு இடையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மெக்சிகோ, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட 8 பேர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட 9 மணி நேரம் முதல் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் அது கண்டறியப்பட்டதுதான் என்று, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஃப்னான் முதலில் தலை வலிக்கிறது என்று கூறியிருக்கிறார். அதன்பின் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது பெற்றோர் திகைத்துப் போயிருக்கின்றனர். சிகிச்சையின் முதல் இரண்டு நாட்களுக்கு, அஃப்னான் வலிப்பு ஏற்பட்ட பாதிப்பிலேயே இருந்திருக்கிறார்.

amoeba virus
amoeba virus

“அஃப்னான் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர், கேரளாவில் இந்த நோயால் மூன்று பேர் இறந்திருந்தனர். அவர்களில் இருவர் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். ஆனால், இது பொது சுகாதாரப் பிரச்னை என்பதால் நாங்கள் அரசுக்குத் தெரிவித்தோம், ஒரு விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டது,” என்று கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அப்துல் ரவூப் தெரிவித்தார்.

கோழிக்கோடு மாவட்டத்தின் பயோல்லி நகராட்சியின் திக்கோட்டி கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது மகன் நீச்சலடிக்கச் சென்றதாக மருத்துவர்களிடம் அஃப்னானின் தந்தை எம்.கே.சித்திக் தெரிவித்தார். இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறுகிறார் மருத்துவர் ரவூப்.

“நான் சமூக ஊடகங்களில் நிபா வைரஸின் விளைவுகள் பற்றி படித்துக் கொண்டிருந்த போது, அமீபா கிருமியைப் பற்றி ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. இந்த நோய்த்தொற்றினால் ஏற்படும் வலிப்பு பற்றி அதில் படித்தேன். அஃப்னானுக்கு வலிப்பு ஏற்பட்டவுடன், நான் அவரை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். வலிப்பு நிற்காததால், வடக்கரையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு நரம்பியல் நிபுணர் இல்லாததால், அவர்கள் எங்களை பேபி மெமோரியல் மருத்துவமனைக்குச் செல்லப் பரிந்துரைத்தனர்,” என்று பால் பண்ணையாளரான சித்திக் (46) தெரிவித்தார்.

“என் மகனுக்கு ஏன் வலிப்பு வருகிறது என்பதை மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இது அவருக்கு அதுவரை நடக்காத ஒன்று. காய்ச்சல்- தலைவலி ஏற்படும் ஐந்து நாட்களுக்கு முன்பு அவர் குளத்தில் நீந்தச் சென்றதாக மருத்துவரிடம் சொன்னதற்கு இதுவே முக்கிய காரணம்,” அஃப்னானின் தந்தை சித்திக் கூறுகிறார்.

நெக்லேரியா ஃபௌலேரி அமீபா மனித உடலில் நாசி வழியாக நுழைந்து மண்டையோட்டில் உள்ள கிரிப்ரிஃபார்ம் தட்டு வழியாக மூளையை அடைகிறது. “இது ஒரு ஒட்டுண்ணி, இது பல்வேறு ரசாயனங்களை வெளியிட்டு மூளையை அழிக்கிறது,” என்று டாக்டர் ரவூப் கூறினார்.

இது காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, உணர்திறனில் மாற்றம், வலிப்புத் தாக்கங்கள் மற்றும் கோமா ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நோயாளிகள் மண்டை ஓட்டுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக இறக்கின்றனர்.

“இக்கிருமி நன்னீர் ஏரிகளில், குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் காணப்படுகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில் மக்கள் குதிக்கவோ மூழ்கவோ கூடாது. அது அமீபா உடலில் நுழைவதற்கான உறுதியான வழி. தண்ணீர் மாசுபட்டிருந்தால், அமீபா உங்கள் மூக்கு வழியாக நுழைகிறது. அசுத்தமான நீர்நிலைகளைத் தவிர்ப்பது நல்லது. நீச்சல் குளங்களில் கூட நீச்சல் வீரர் தனது வாயை நீர் மட்டத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டும். நீர் ஆதாரங்களில் குளோரின் சேர்ப்பது மிகவும் முக்கியமானது,” என்று டாக்டர் ரவூஃப் கூறுகிறார்.

ஆனால் கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக் கட்டுரையில், நைஜீரியா மற்றும் மங்களூருவில் பிற நீர் ஆதாரங்களில் இருந்து குழந்தைகள் நேக்ளேரியா ஃபைலேரி அமீபாவை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அங்கு குளியலுக்கான நீர் நோய்க்கான ஆதாரமாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குழு எழுதிய ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதன் படி, இந்த அமீபா தொற்று ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்களின் வயது ஒன்பது வயது முதல் 25 வயது வரை இருக்கும்.

உயிர் பிழைத்தவர்களின் விவரங்கள்:

ஆஸ்திரேலியா (1971) – 14 வயது ஆண், அறிகுறிகள் தெரியவில்லை
அமெரிக்கா (1978) – ஒன்பது வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – மூன்று நாட்கள்
மெக்சிகோ (2003) – 10 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – ஒன்பது மணிநேரம்
அமெரிக்கா (2013) – 12 வயது பெண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – இரண்டு நாட்கள்
அமெரிக்கா (2013) – எட்டு வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – ஐந்து நாட்கள்
பாகிஸ்தான் (2015) – 25 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – மூன்று நாட்கள்
அமெரிக்கா (2016) – 16 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – ஒரு நாள்
பாகிஸ்தான் (2023) – 22 வயது ஆண், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் – இரண்டு நாட்கள்

“உலகம் முழுவதும், இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட சுமார் 400 பேர் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30-க்கும் குறைவான நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் 2018 மற்றும் 2020-இல் தலா ஒரு நோய்த்தொற்று பதிவானது. இந்த ஆண்டு சுமார் 5 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது,” என்று மருத்துவர் ரவூஃப் கூறினார்.

அஃப்னானைப் பொறுத்தவரை, மருத்துவர்களால் அவரது இடுப்புப் பகுதியில் இருக்கும் தண்டுவடத்திற்கான சிகிச்சையைச் செய்ய முடிந்தது. அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் கலவையை வழங்கினர் (ஆம்போடெரிசின் பி, ரிஃபாம்பின் மற்றும் அசித்ரோமைசின்). “நோயாளியின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் நேக்ளேரியா ஃபைலேரி கிருமியைக் கண்டறியும் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் சோதனை (PCR) செய்தோம்,” என்று மருத்துவர் கூறினார்.

“முன்பு பெறுவதற்கே கடினமாக இருந்த மில்டெஃபோசின் மருந்தையும் அவருக்குக் கொடுத்தோம். இதேபோன்ற தொற்றுகள் பதிவானவுடன் அரசாங்கம் அதை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்தது. இந்த மருந்து இந்தியாவில் அரிதான நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததும் அல்ல,” என்றார் மருத்துவர்.

“முதல் நாள் வலிப்பு ஏற்பட்டிருந்ததால், அஃப்னானுக்கு சுயநினைவு அவ்வளவாக இல்லை. மூன்று நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இடுப்புப் பகுதியில் மீண்டும் சோதனை செய்தோம். ஆனால் அது எதிர்மறையான முடிவைக் கொடுத்தது. அதனால் நாங்கள் அவரை ஒரு அறைக்கு மாற்றி சிகிச்சையைத் தொடர்ந்தோம்,” என்று மருத்துவர் ரவூஃப் கூறினார்.

10-ஆம் வகுப்பு படிக்கும் அஃப்னான், அடுத்த ஒரு மாதத்திற்கு மருந்துகளை உட்கொண்டு, தனது வீட்டில் ஓய்வெடுப்பார்.

“எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவனிடம் கேட்டார்கள். அவன் நர்சிங் பட்டம் பெற விரும்புவதாக அவர்களிடம் கூறினான். மருத்துவமனைகளில் செவிலியர்கள் செய்யும் மகத்தான சேவையால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர்கள் நோயாளிகளுக்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அவர் மருத்துவர்களிடம் கூறினார்,” என்று சித்திக் மனம்விட்டு சிரித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments