விஜய்க்கு இடது சாரிகள் ஆதரவு : ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு இடங்களே தேவை

விஜய்க்கு இடது சாரிகள் ஆதரவு : ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு இடங்களே தேவை

Leftists Extend Support to Vijay: Just Two Seats Short of Forming the Government

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூரில் போட்டியிட்ட லதா மற்றும் பத்மநாதபுரத்தில் போட்டியிட்ட செல்லசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து மற்றும் தளியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்

சென்னை, மே. 08

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.

இதனையடுத்து இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுமே ஆதரவுக் கடிதங்களை அளித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூரில் போட்டியிட்ட லதா மற்றும் பத்மநாதபுரத்தில் போட்டியிட்ட செல்லசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து மற்றும் தளியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களை கொண்ட விசிக இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் 08.05.2026-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி சென்னை சூளைமேடு, அமீர் ஜான் தெருவில் உள்ள ஏஐபிஇயூ அலுவலகம் ‘தாரக் இல்ல’த்தில் கே.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் மதவெறுப்பு அரசியல் சக்திகளை உறுதிபட தோற்கடித்துள்ள தமிழ்நாடு வாக்காளர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு பாராட்டுகிறது. போட்டியிட்ட அணிகளில் மிக அதிகமான இடங்களை தமிழக வெற்றி கழகத்துக்கு மக்கள் வழங்கியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதிக்கிறது.

அதிக இடங்களைப் பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு பதிலாக ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றிய அரசின் அரசியல் கருவியாக செயல்படும் ஆளுநர், தன்னிடம் தனிப்பெரும்பான்மையைக் கடிதம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமல்படுத்தி புறவழியாக பாஜகவின் ஆட்சியை திணிக்க இதன் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கு இடமளிக்காத வகையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பின்னணியில் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி உள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்குமாறும், சட்டமன்ற அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் முடிவெடுக்க வேண்டிய ஆளுநர், அவரை அழைக்க மறுத்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

ஆளுநர், அரசியல் பாரபட்சத்தோடு செயல்பட்டு வருவதும், ஏற்கெனவே உள்ள மரபுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அரசியல் சாசன கோட்பாடுகளை மீறி இருப்பதும் முற்றிலும் ஏற்க இயலாத நடவடிக்கை ஆகும். தமிழக வெற்றிக் கழகம், ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை வெளிப்படையாக கண்டிப்பதே மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு ஆகியவற்றில் அக்கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பது ஜனநாயக எண்ணம் கொண்டோரின் அழுத்தமான கருத்தும், எதிர்பார்ப்பும் ஆகும் என சிபிஐ(எம்) மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது.

இதற்கிடையில் திமுக – அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது.
ஆளுநரின் நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை புகுத்துவதற்கும், மக்களின் தீர்ப்புக்கு மாறாக குதிரை பேரம் நடந்தேறுவதற்கும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் வழிவகுத்து விடக் கூடாது. இது குறித்து விவாதித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படுவதையும், கொல்லைப் புற வழியாக பாஜக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதையும் அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தது.

இத்தகைய பின்புலத்தில் ஜோசப் விஜய் கடிதம் மூலம் கேட்டுக்கொண்ட அடிப்படையில் அரசு அமைக்க ஆதரவை வழங்குவது என்றும், அதன் மூலம் ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை முறியடித்து மக்கள் தீர்ப்பிற்கான மரியாதையை உறுதி செய்வது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதேநேரத்தில் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்றும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

புதிய அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, சமூக நீதி கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.