Home Blog Page 5

சிஐடியு கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

சிஐடியு கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Tamil Nadu Government Transport Employees Federation announces Fort blockade protest on October 9th, urging the government to resolve CITU demands

  • தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு

  • கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

சென்னை, அக். 06

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது குறித்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு பெற்றுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவையும் பாதிக்கப்படாமல் கடந்த 50 நாட்களாக நடைபெறும் தொடர் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த செப்டம்பர் 1ம் தேதி போக்குவரத்து அமைச்சர் அழைத்து பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சர் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.
சிஐடியு முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி வியாழக்கிழமை அன்று கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சென்னை தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி

சென்னை தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி

PMK founder Ramadoss admitted to private hospital in Chennai

  • அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்பு

  • ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் அன்புமணி பதிலடி

சென்னை, அக். 06

சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதயம் தொடர்பான பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,

“ நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்” என்றார்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் கடந்த சில மாதங்களாக குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மேலும், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார் ராமதாஸ்.

அதேபோல, ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் அன்புமணியும் பதிலடி கொடுத்து வந்தார். இந்த சூழலில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி நேரில் சென்று நலம் விசாரித்தது பாமக வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 டார்ஜிலிங்கில் பேய் மழை : நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி

டார்ஜிலிங்கில் பேய் மழை : நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி

Heavy rain in Darjeeling: 17 killed in landslide

  • “மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.”

  • டார்ஜிலிங்குக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்த நிலையில் நிலச்சரிவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

டார்ஜிலிங், அக். 5

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நாளை நேரில் பார்வையிடுகிறார்.

கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலையை ஒட்டி உள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதில், டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17  பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவானது டார்ஜிலிங்கின் மிரிக் – சுகியாபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதைகளில் நிகழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், வீடுகள், சாலைகள் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் பற்றிய மேலதிக துல்லிய விவரங்கள் வந்து சேர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டார்ஜிலிங் மாவட்ட நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், “மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.” என்றார்.

டார்ஜிலிங்கின் சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தான் கார் பகுதியில் மட்டும் மண்ணில் புதைந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.

நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு: 

இதற்கிடையில், மேற்கு வங்கம், டார்ஜிலிங், கலிம்பாங் ஆகிய பகுதிகளில் நாளை (அக்.6) வரை அதிகனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் இன்னும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

தசரா விடுமுறையை ஒட்டி டார்ஜிலிங்குக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்த நிலையில் நிலச்சரிவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

இந்நிலையில், டார்ஜிலிங் நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “டார்ஜிலிங் நிலச்சரிவில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்நு குணமாகட்டும்.

கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Heavy rain likely in 4 districts of Tamil Nadu tomorrow – Chennai Meteorological Department announcement

  • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.6) முதல் அக்.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

சென்னை, அக். 05

தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே 820 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.6) முதல் அக்.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். 8-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி மதுரை மாவட்டம் எழுமலையில் 13 செமீ, கிருஷ்ணகிரியில் 12 செமீ, நாமக்கல்லில் 11 செமீ, சேலம் மாவட்டம் எடப்பாடியில் 10 செமீ, சங்கரி துர்க்கத்தில் 7 செமீ, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் 6 செமீ, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, விருதுநகர், கரூர் மாவட்டம் தோகைமலை, மதுரை மாவட்டம் பேரையூர், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

கரூர் சம்பவம் : அரசு பொறுப்பேற்க வேண்டுமா ?  இது அரசியல் அல்ல, அசிங்கம் – சீமான்  சாடல்  

கரூர் சம்பவம் : அரசு பொறுப்பேற்க வேண்டுமா ?  இது அரசியல் அல்ல, அசிங்கம் – சீமான்  சாடல்

Karur incident: Should the government take responsibility? This is not politics, it is shame – Seeman Slams

  • கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள்.

  • விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து.

தூத்துக்குடி, அக. 03

“கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல அசிங்கம்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுக தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளதாக சொல்கிறது. இந்த தேர்தலில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வாக்கை எளிதாக திமுகவால் பெற முடியாது.

ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதற்கு விசாரணைக் குழுவை பாஜக அனுப்பியுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் மக்களே போராடிய போது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?. அப்போது காவல்துறை, மாவட்ட ஆட்சியர் போராடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே?. வன்முறை ஏற்பட்டாலும் கூட கண்ணீர் புகைக்குண்டு வீசித்தானே கூட்டத்தை கலைத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் பாஜக விசாரணைக்குழு வந்திருக்க வேண்டியதுதானே?.

கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள். இப்போது சில மாதத்தில் தேர்தல் வருவதால், அரசியல் செய்வதற்காக உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்பியுள்ளார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். அதற்கு அவர் பொறுப்பேற்கவே இல்லையே?. ‘இந்த சம்பவத்துக்கு காரணமாகிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள், இது வலிமிகுந்ததாக உள்ளது, இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ‘அங்கு நடக்காதது இங்கு ஏன் நடந்தது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், சின்ன இடத்தை கொடுத்தார்கள்’ என விஜய் சொல்கிறார்.

நீங்கள் கேட்ட இடம்தானே இது. அங்குதானே எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு முன்னர் கூட்டம் நடத்தினார். சிறிய இடமாக இருந்தால், அந்த இடம் வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியதுதானே. கரூருக்கு அன்று வந்தவுடனே காவல்துறைக்கு நன்றி தெரிவித்து விஜய் பேசினார். சாவு விழுந்தவுடன் அந்த காவல்துறை மீது ஏன் பழிபோடுகிறார். இதனை கேட்கும் போது கடுமையான கோபம் வருகிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியாளர்களை, சாதனையாளர்களை அழைத்து பேச வைக்காத தமிழக அரசு, திரைப்பட நடிகர்களை, இயக்குநர்களை பேச வைக்கிறார்கள். கல்வி விழாவுக்கு கூட நடிகர்களை அரசு அழைத்தால், அப்புறம் நடிகர்கள் ஏன் நாடாள துடிக்க மாட்டார்கள். நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம்.

விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து.

விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல, அசிங்கம்.

நாங்கள் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளோம், 150 வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன். இப்போது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் எங்கே போனார். அப்போது நாங்கள்தான் களத்தில் நின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

வணிக சிலிண்டரின் விலை உயர்வு ; வீட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை 

வணிக சிலிண்டரின் விலை உயர்வு ; வீட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

Commercial cylinder price hike; domestic gas cylinder price unchanged

  •  வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை

  • தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது

சென்னை, அக். 01

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாக நிலையானதாக உள்ளது. இந்த முறையும் சிலிண்டரின் விலை குறைந்தால் நல்லது என்று நுகர்வோர் கருதி வருகிறார்கள்.  மேலும், தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. அதாவது ஒரு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானித்து வருகின்றன.

ஆனால், சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாகவே மாறாமல் அப்படியே நிலையானதாக உள்ளது.  கேஸ் விலை குறையும் என்று நீண்ட காலமாகவே வாடிக்கையாளர்கள் காத்திருக்கும்போது, இந்த முறையாவது சிலிண்டரின் விலை குறையாதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமல்ல, தீபாவளி பண்டிகையும் வரப் போவதால், மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ் தரும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபடியே இருந்தன.  இந்நிலையில், இன்று அக்டோபர் 1ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை வெளியிடப்பட்டுள்ளன. அதில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி 51.50 ரூபாயும், ஆகஸ்ட் 1ம் தேதி 33.50 ரூபாயும், ஜூலை 1ம் தேதி 58.50 ரூபாயும், ஜூன் மாதம் 24 ரூபாயும் விலை குறைந்தது.  எனவே இந்த மாதமும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இந்த மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிக சிலிண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும், வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இது இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. எனினும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வீட்டு சிலிண்டரின் குறைந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்​படும் – ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ்

தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்​படும் – ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ்

Around 12,000 special trains will be operated from October 1 on the occasion of Diwali – Railway Minister Ashwini Vaishnav

  • சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும். இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம்.

  • கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்​றி​லும் பொதுப் பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும்.

புதுடெல்லி, செப்​. 25

தீபாவளி மற்றும் சாத் பண்​டிகை முன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலத்​தில் ரயில்​களில் கூட்ட நெரிசலை குறைப்​ப​தற்​காக சுமார் 12,000 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்க உள்​ளது. இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம். இது, ஆஸ்​திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும்.

இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும். இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்​றி​லும் பொதுப் பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும்.

செப்​டம்​பர் 23-ம் தேதி செவ்​வாய்க்​கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​ பட்​டுள்​ளன. தேவை​யின் அடிப்​படை​யில் படிப்​படி​யாக கூடு​தல் ரயில்​கள் அறிவிக்​கப்​படும். 70 ரயில்வே கோட்​டங்​களில் 29-ல் 90 சதவீதத்​திற்கு மேல் நேரம் தவறாமை எட்​டப்​பட்​டுள்​ளது. வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் தயார் நிலை​யில் உள்​ளது. இதன் மற்​றொரு ரயில் அக்​டோபர் 15-ம் தேதிக்​குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் அறி​முகப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

கூடு​தலாக 1.5 கோடி பேர் பயணிக்​கும் வகை​யில்​ கடந்த ஆண்டு பண்​டிகை காலத்​தில் 7,724 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்​கியது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

 Tamil Nadu Government Announces Kalaimamani Awards

  • கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

  • சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

சென்னை, செப். 25

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே. ஜேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

கலைமாமணி விருது வழங்கக் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாகப் பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டில் நாடகப் பிரிவில் பூச்சி எஸ்.முருகன், திரைப்படப் பிரிவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 30 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

2022-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 30 பேருக்கும், 2023-ல் நடிகர் கே.மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட 30 பேருக்கும் விருது வழங் கப்படுகிறது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

மேலும், அகில இந்திய அளவில் பாரதியார் விருது (இயல்) ந.முருகேசபாண்டியன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பால சரஸ்வதி விருது (நாட்டியம்) முத்துகண்ணம்மாள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 3 பவுன் எடையிலான தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

அதேபோல, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், சிறந்த கலை நிறுவனமாக சென்னை தமிழ் இசை சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழுவாக மதுரை பாலமேடு கலைமாமணி எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு : மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை

ஜிஎஸ்டி வரி குறைப்பு : மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை

GST tax cut: Maruti sells 30,000, Hyundai 11,000 cars, sets record

  • ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார் விற்பனை சராசரியைவிட 5 முதல் 6 மடங்கு வரை உயர்வு

  • மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்தது. டாடா பஞ்ச் மற்றும் கியோ சிராஸ் ஆகியவற்றின் விலை ரூ.1.6 லட்சம் வரை குறைந்தது.

புதுடெல்லி, செப். 24

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலான முதல் நாளில் மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை படைத்தன. ஏ.சி., டி.வி. ஆகியவை 2 மடங்கு விற்பனையாகி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவராத்திரி முதல் நாளான கடந்த 22-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலானது. இதனால் கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, புதிய கார்கள் வாங்குவோர் உற்சாகமடைந்தனர். வரி குறைப்பு அமலான நேற்று முன்தினம் மட்டும் 30,000 மாருதி கார்கள் விற்பனையாகின. அதேபோல, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்றது.

நவராத்திரி முதல் தீபாவளி வரை பண்டிகைக் காலமாகும். இத்துடன் ஜிஎஸ்டி வரி குறைப்பும் சேர்ந்துள்ளதால் கார் விற்பனை சராசரியைவிட 5 முதல் 6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவன மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறும்போது, ‘‘கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கார் வாங்குவது பற்றி விசாரணைகள் நடைபெற்றன. ஏற்கெனவே 25,000 கார்கள் விற்கப்பட்ட நிலையில், ஒரே நாள் விற்பனை மட்டும் 30,000 ஆயிரத்தை எட்டியது.கடந்த 18-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்புடன் நாங்கள் கூடுதல் விலை குறைப்பை அறிவித்ததில் இருந்து நாளொன்றுக்கு 15,000 பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 75,000 பேர் கார்கள் வாங்க முன்பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமாகும். டீலர்கள் கார்களை டெலிவரி செய்வதற்காக நள்ளிரவு வரை ஷோரூம்களை திறந்து வைத்துள்ளனர்’’ என்றார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன இயக்குனர் தரூண் கார்க்கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் நவராத்திரி தொடக்கம் காரணமாக, கார் சந்தையில் விற்பனை நன்றாக உள்ளது. ஒரே நாளில் எங்கள் டீலர்கள் 11,000 கார்களை விற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டில் மிக அதிகளவில் நடைபெற்ற ஒரு நாள் விற்பனை இதுதான்’’ என்றார்.

அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை மக்கள் அடையும் வகையில் குறைத்தன. மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனம் கூடுதல் தள்ளுபடிகளை அறிவித்தது. இதனால் மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரின் விலை ரூ.1.29 லட்சம் வரை குறைந்தது. மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்தது. டாடா பஞ்ச் மற்றும் கியோ சிராஸ் ஆகியவற்றின் விலை ரூ.1.6 லட்சம் வரை குறைந்தது.

கடந்த சில மாதங்களாக மிகவும் மந்தமாக இருந்த கார் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகனங்களின் ஆண்டு விற்பனை 5 முதல் 7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நேற்று முன்தினம் ஏ.சி. மற்றும் டி.வி. விற்பனையும் அதிகரித்தன. ஏ.சி மற்றும் டி.வி.களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோ ரூம்களிலும், இ-வர்த்தக தளங்களிலும் அதிகளவில் ஏ.சி. மற்றும் டி.வி.க்களை வாங்கினார். இதனால் இவற்றின் விற்பனை 2 மடங்கு அதிகரித்ததாக ஹேயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சதீஷ் கூறினார்.

ஏ.சி வாங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் அதிக அளவில் விசாரிப்பதால், செப்டம்பர் மாத விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையை விட 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் எம்.டி.தியாகாரஜன் கூறினார். டி.வி.க்களில் குறிப்பாக, 43 அங்குலம் முதல் 55 அங்குலம் வரையிலான டி.வி.க்களின் விற்பனை அதிகரித்தது.

நேற்று முன்தினம் முதல் நாள் விற்பனை 30 முதல் 35 சதவீதம் அதிகரித்ததாக சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். இவற்றில் அதிக அளவு பிளிப்கார்ட் மூலம் நடைபெற்றுள்ளது. இ-வர்த்தக தளங்கள் அதிகளவிலான தள்ளுபடி வழங்கியதால், இவற்றில் அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும் அதிகரித்தன.

பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைந்ததால், ஏராளமான பொருட்களின் விலைகள் மாற்றியமைக் கப்பட்டன. இந்துஸ்தான் லீவர் உட்பட முன்னணி நிறுவனங்கள் சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தன. பண்டிகை காலத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க,  எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம்

இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க,  எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம்

China introduces easy-to-obtain ‘K’ visa to attract Indian software engineers

  • அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

  • தற்போது எச்1பி விசா கெடுபிடியால் உயர் திறன்சார் பணியாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும்

வாஷிங்டன்/ பெய்ஜிங், செப். 23

இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேர்வதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தின் முன்னாள் மூத்தஅதிகாரி எஸ்தர் கிராபோர்டு கூறியதாவது: ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். ஆட்சி நிர்வாகம் மாறிய காலத்தில் எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு சவால்கள் எழுந்தன. அப்போது இந்திய பொறியாளர்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டனர். நேரம் காலம் பார்க்காமல் கூடுதலாக உழைத்தனர். எக்ஸ் தளத்தை தொடர்ந்து இயங்கச் செய்தனர். அவர்களோடு சீன பொறியாளர்களும் கடினமாக உழைத்தனர். இந்திய, சீன பொறியாளர்களால்தான் எக்ஸ் வலைதளம் காப்பாற்றப்பட்டது.

அமெரிக்கர்கள் மத்தியில் வெளிநாட்டு பணியாளர்கள் மீது கடும் அதிருப்தி காணப்படுகிறது. இது நாட்டின் நலனுக்கு எதிரானது. சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால்தான் அமெரிக்காவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். இவ்வாறு எஸ்தர் கிராபோர்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமான அமெரிக்க நிபுணர்கள், தொழிலதிபர்கள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அவர்கள் கூறியதாவது: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையகமாக கருதப்படுகிறது. இங்கு செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். மேலும் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர்.

நாசா, ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்க அரசின் எச்1பி விசா கட்டண உயர்வால் இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை தங்கள் நாடுகளுக்கு ஈர்க்க தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி வீழ்ந்தது. அப்போது, ஜெர்மனியில் இருந்து மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தனர். தற்போது எச்1பி விசா கெடுபிடியால் உயர் திறன்சார் பணியாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வைரலாகும் எலான் மஸ்க் கருத்து:எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அவரது முந்தைய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதில் மஸ்க் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் போன்ற முன்னணி நிறுவனங்களை உருவாக்கி உள்ளேன். ஆனால், எச்1பி விசா மூலமாகவே நான் அமெரிக்காவில் நுழைந்தேன். இந்த விவகாரத்தில் என்னோடு யார் விவாதம் செய்ய முயன்றாலும் அவர்களை எதிர்க்க தயாராக உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ‘கே’ விசா அறிமுகம்: அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி அளிக்க வேண்டும். பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சூழலில், தற்போது எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது.

சீனா சார்பில் 12 வகையான விசாக்கள் நடைமுறையில் உள்ளன. வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஆர் விசா, இசட் விசா வழங்கப்படுகிறது. இதில் ஆர் விசாவில் 180 நாட்களும், இசட் விசாவில் ஓராண்டும் சீனாவில் தங்கியிருந்து பணியாற்ற முடியும்.இந்த சூழலில், புதிதாக கே விசாவை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம்செய்ய உள்ளோம். இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விசாவைப் பெற சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். நீண்டகாலம் சீனாவில் தங்கி பணியாற்றலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாக பெறலாம். கல்வி பயிற்றுவித்தல், ஆராய்ச்சித் துறையில் இருக்கும் இளம் வல்லுநர்களும் கே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். 2035-ல் உலகின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப தலைமையகமாக சீனாவை மாற்றஅதிபர் ஜி ஜின்பிங் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக இளம் ஆராய்ச்சியாளர், மிக சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற 2 திட்டங்களை சீன அரசு செயல்படுத்த உள்ளது. இவ்வாறு சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்