
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்து தமிழக முஸ்லிம் அமைப்புகள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்
Tamil Nadu Muslim Organizations held grand protest against Israel’s genocide in Palestine
-
ஐ.நா.வில் போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் அண்மையில் இந்தியா புறக்கணித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு என்ற காந்தியடிகளின் வழிகாட்டுதலுக்கும் நமது பாரம்பரிய நிலைப்பாட்டிற்கும் முரணாக பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.
-
இந்தியாவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு மேலும் அதிகமான உதவிகளை அனுப்பிட ஒன்றிய அரசு உடனடியாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
சென்னை, நவ. 01
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து தமிழக முஸ்லிம் அமைப்புகள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தியது: உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித பள்ளிவாசலான அல் அக்சா அமைந்துள்ள பாலஸ்தீன் மீது பயங்கரவாதத்தால் உருவாகி பயங்கரவாதத்தையே தனது வழிமுறையாகக் கொண்ட இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்பு மனசாட்சியுள்ள அனைவரையும் அன்றாடம் உலுக்கி வருகின்றது.
ஈவிரக்கமற்ற கொடுமை
இத்தாக்குதல்களால் பல்லாயிரம் பச்சிளம் குழந்தைகளும், முதியவர்களும், பெண்களும் மிகவும் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனை ஆக்கிரமித்து, அதன் உரிமைகளை அபகரித்துள்ள இஸ்ரேல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவோடு தனது ஈவிரக்கமற்ற கொடுமைகளைத் தொடர்ந்து வருகிறது.
ஐ.நாவில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகும் கூட, பாலஸ்தீன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் இந்தியா புறக்கணித்தது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு என்ற காந்தியடிகளின் வழிகாட்டுதலுக்கும் நமது பாரம்பரிய நிலைப்பாட்டிற்கும் முரணாக அமைந்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் மனித குலத்திற்கே சவால்
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான உலகில் மனிதக் குடியேற்றம் மிகவும் நெருக்கமாக இருக்கும் காஸா பகுதியில் இஸ்ரேல் அப்பாவி மக்கள் மீது நடத்திவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மனித குலத்திற்கே விடுக்கப்பட்ட சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள் : ‘இந்தியாவுக்காகப் பேசுவோம்’ 3-ம் அத்தியாயம் | மாநில உரிமைகளை பேசியுள்ளார் முதல் அமைச்சர் மு .க. ஸ்டாலின்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகளையும், நம் தாய்த் திருநாட்டையும் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் 31.10.2023 செவ்வாய் பிற்பகல் 4 மணிக்குக் கூட்டமைப்பின் தலைவர் மவ்லவி P.A.காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
⚫ பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
⚫ ஐ.நாவின் போர் நிறுத்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
⚫ கொடூரமான பாதிப்புக்குள்ளாகியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உலக நாடுகள் உதவிட வேண்டும்.
⚫ இஸ்ரேல் ஆதரவு என்ற நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மாற்றிக் கொள்வதுடன் ஐ.நா. மன்றத்தில் காந்தியடிகளின் வழிகாட்டல் மற்றும் பாரம்பரியமான நமது நிலைப்பாட்டின் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீனம் அமைய இந்திய உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு மேலும் அதிகமான உதவிகளை அனுப்பிட ஒன்றிய அரசு உடனடியாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
⚫ பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ. எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். எம்.பி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே, பாலகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மரு ரவீந்திரநாத், மதிமுகவின் செந்திலதிபன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் கே எம் அபுபக்கர். டான் பாஸ்கோ தொழில்நுட்ப பயிலகத்தின் இயக்குனர் அருத்தந்தை. வி சபாஸ்தியன். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர் மவ்லவி மன்சூர் காஷிபி மற்றும் ஹாஜி பஷீர் அஹ்மத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, தேசிய லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத், உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இஸ்ரேலிய அராஜகத்திற்கு எதிர்ப்பையும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.