
இந்திய வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் பதிவு செய்துகொள்ள வெப்சைட் உருவாக்கப்படும் – சவூதி அரேபிய புதிய இந்திய துணை தூதர் உறுதி
Website to be developed for Indian businessmen, professionals to register – Saudi Arabia’s new Consul General of India confirms
-
இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கு இவை வழிவகுக்கும் -சவூதி அரேபியாவின் இந்திய துணை தூதர் ஃபஹத் அகமது கான் சூரி
-
இந்திய சமூகத்துடனான தூதரக உறவை வலுப்படுத்த கவனம் செலுத்தும் வகையில் ஓபன் ஹவுஸ் முறை மேம்படுத்தப்படும் – ஃபஹத் அகமது கான் சூரி
ஜெத்தா, ஆக. 31
சவூதி அரேபியாவின் இந்திய துணை தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஃபஹத் அகமது கான் சூரி, கடந்த ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு ஜெத்தா இந்திய சமூகம் சார்பில் ஜெத்தா நகரில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


விழா நாயகராக அரங்குக்கு வந்த துணை தூதர் ஃபஹத் அகமது கான் சூரிக்கு, சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஃபஹத் அகமது கான் சூரி, இந்திய சமூகத்தின் நிலையான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தின் பங்களிப்பை அவர் வெகுவாக பாராட்டினார். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கு இவை வழிவகுக்கும் என்றும் ஃபஹத் அகமது கான் சூரி குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், முதலீடு மற்றும் புதுமைக்கான புதிய வழிகளை திறக்கவும், வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இங்குள்ள இந்திய வல்லுநர்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு – அமெரிக்கா இடையே ரூ.850 கோடி வர்த்தக ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து
சவூதி அரேபியாவில் உள்ள இந்திய வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பதிவு செய்ய தரவு தளத்தை இந்திய துணைத் தூதரகம் உருவாக்க தொடங்கி உள்ளதாகவும் துணை தூதர் ஃபஹத் அகமது கான் சூரி தெரிவித்தார். இந்திய சமூகத்துடனான தூதரக உறவை வலுப்படுத்த கவனம் செலுத்தும் வகையில் ஓபன் ஹவுஸ் முறை மேம்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் இடம்பெற்ற குட் ஹோப் அகாடமி மற்றும் ஃபெனோம் அகாடமி குழுவைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கவர் நடனங்கள், கோழிக்கோடு இசைக் குழுமத்தின் மெல்லிசைப் பாடல்கள் ஆகியவை அனைவரின் பாராட்டை பெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி, வழக்கமான நிகழ்ச்சி போன்று இல்லாமல் இந்திய-சவுதி அரேபிய கலாச்சார பாரம்பரிய தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு அடையாளமாக இருந்தது.
சவூதி அரேபியாவின் இந்திய துணை தூதரான ஃபஹத் அகமது கான் சூரியின் பதவிக்காலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் அமையும் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திய ஜெத்தா இந்திய சமூக நிர்வாகக் குழுவினரை அனைவரும் பாராட்டினர்.
-தகவல் எம்.சிராஜுதீன், ஜெத்தா.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்