Tuesday, March 17, 2026
Google search engine
Homeஇந்தியாஅதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை -மதுரை எம்பி கோரிக்கை

அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை -மதுரை எம்பி கோரிக்கை

  • அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனம், வங்கிகளில், அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிடுமாறு, நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கேள்வி

  • பறி கொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால், சட்டத்தை திருத்துங்கள். மக்களுக்கு சொல்லுங்கள் அவர்கள் சேமிப்பின் கதி என்ன? பணத்திற்கு பாதுகாப்பு என்ன?

சென்னை, மார்ச்.14

அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு, மதுரை எம்பி வெங்கடேசன், நிதியமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதானி குழுமத்தின் மோசடிகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை வந்ததில் இருந்தே டெல்லி தகித்து காணப்பட்டது. பெரும் பரபரப்பை அந்த அறிக்கை ஏற்படுத்தியது. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.

அந்த வரிசையில், அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனம், வங்கிகளில், அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிடுமாறு, நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கேள்வியெழுப்பினார்… ஆனால், அதற்கு, “ரிசர்வ் வங்கி சட்டப்படி அதை வெளியிட முடியாது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.  “சட்டம் குறுக்கே வந்தால் அதைத் திருத்துங்கள் நிதியமைச்சரே” என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.  மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை இதுதான்:

அதானி குழுமம் வங்கிகளில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தீபக் பைஜ் என்கிற உறுப்பினர் கேள்வி (எண் 177/13.03.2023) எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் கடன் குறித்து எந்த விவரத்தையும் தரவில்லை. ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45 E இன் படி வங்கிக் கடன் குறித்த விவரங்கள் ரகசியமானவை, அவற்றை வெளியிட இயலாது என மறுத்துள்ளார்.

குடியுரிமை குறித்தே சட்ட திருத்தம் வருகிறது. ஒரு மாநிலத்திற்கு இருக்கிற விசேட அந்தஸ்து பறிக்கப்பட்டு ஒன்றிய ஆளுகைப் பகுதியாக மாற்றப்பட முடிகிறது.

இதையும் படியுங்கள் : காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விவசாயிகளை கொந்தளிக்க வைத்த 3 சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. பின்னர் திரும்பப் பெற வேண்டியும் வந்தது. ஆனால் தங்களின் பல்லாயிரம் கோடி சேமிப்பு என்ன ஆகும் என்று மக்கள் பதறும் போதும் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு ரகசியம் என்கிறது ஒன்றிய அரசு.

சட்டம் குறுக்கே வந்தால் சட்டத்தை திருத்துங்கள் நிதி அமைச்சரே. எல்.ஐ.சி அதானி குழுமத்திற்கு தந்துள்ள கடன் டிசம்பர் 31, 2022 அன்று ரூ.6347 கோடிகள். மார்ச் 5, 2023 அன்று ரூ.6182 கோடிகள். எல்.ஐ.சி. தந்துள்ள கடன், பாலிசிதாரர்களின் சேமிப்புகள்தான். கடன்கள் எல்லா முன் எச்சரிக்கைகளையும் கணக்கிற்கொண்டு வழங்கப்பட்டு இருப்பதாக, இந்த அரசு நிதி நிறுவனங்கள் விளக்கம் தருகின்றன.

ஆனால் அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது. ஆகவே அதானி நிறுவனங்களில் உள்ள முதலீடு/ கடன் பற்றி விசாரணை தேவை. வங்கிகள் வழங்கியுள்ள கடன், எல்.ஐ.சி தந்திருப்பது போல நிச்சயம் பல மடங்கு இருக்கும். இது மக்கள் பணம். அதை எவ்வளவு யாருக்கு வங்கிகள் தந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.

நிதியமைச்சரே.. பறி கொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால், சட்டத்தை திருத்துங்கள். மக்களுக்கு சொல்லுங்கள் அவர்கள் சேமிப்பின் கதி என்ன? பணத்திற்கு பாதுகாப்பு என்ன? அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments