Tuesday, March 3, 2026
Google search engine
Homeசெய்திகள்தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023|முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு 

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023|முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு 

 

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023|முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

Tamil Nadu Industry and Innovation Policy 2023 | Released by Chief Minister M.K.Stalin

  • தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனமும் புத்தொழில் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்படும்.

  • மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டுப் பண்பாட்டினை பரவலாக்கும் விதமாக “ஸ்டார்ட் அப் தமிழா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கப்படும்.

சென்னை, செப். 20

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023|முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023″னை வெளியிட்டார்.

மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 லட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.

“புத்தொழில்” என்பதற்கான வரையறை

இப்புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையானது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், அந்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு மற்றும் சமூக மூலதனம் இரண்டிலும் அவற்றின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும். தற்போது “புத்தொழில்” என்பதற்கான வரையறை அம்சங்களுடன், பட்டியலினத்தவர், பழங்குடியின சமூகத்தினர், பிற துறைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள புதுமையான மாதிரிகளை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனமும் புத்தொழில் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்படும்.

பிற துணிகர முதலீட்டு நிறுவனங்களின் வழியாக முதலீடு செய்யும் பெரு நிதியம் ஒன்று ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். இந்த பெரு நிதியமானது வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்புரிமை அளிக்கும்.

“ஸ்டார்ட் அப் தமிழா”

மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டுப் பண்பாட்டினை பரவலாக்கும் விதமாக “ஸ்டார்ட் அப் தமிழா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கப்படும்.

ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்ட் திட்டம்

தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையில் பெறக்கூடிய வகையில் அத்தகைய தொகுப்பு அடங்கிய ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சமூக நீதி தொழில் வளர் மையம்

ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அளிக்கும் சமூக நீதி தொழில் வளர் மையம் நிறுவப்படும்.

புத்தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒரு தொழில் வளர் மையம் அமைக்கப்படும்.

ரூ.5 லட்சம் மானியம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களால் உருவாக்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் மானியம், டான்சீட் திட்டத்தில் சிறப்புரிமை மற்றும் இலவச தொழில்வளர் காப்பான் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments