பெட்ரோல் டீசல் விலை ரூ. 3.14 வரை அதிகரிப்பு, இன்று முதல் அமல் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பெட்ரோல் டீசல் விலை ரூ. 3.14 வரை அதிகரிப்பு, இன்று முதல் அமல் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Petrol and Diesel Prices Rise by Up to Rs 3.14; Effective Today: Opposition Parties Protest

  • மேற்கு ஆசியப் போர் தொடங்கியபோது எல்லாம் நன்றாகவே இருக்கிறது என மத்திய அரசு நாட்டு மக்களிடம் கூறியது

  • சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் குறைவாக இருந்தபோது மோடி அரசாங்கம் சாமானிய மக்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்கவில்லை.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசின் தவறுக்காக மக்கள் விலை கொடுக்கப் போகிறார்கள்,” என விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை 97.77 ரூபாயில் இருந்து 100.77 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை 90.67 ரூபாயில் இருந்து 93.67 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 106.64 ரூபாயில் இருந்து 109.74 ஆக உயர்ந்துள்ளது, டீசல் விலை 93.14 ரூபாயில் இருந்து 96.25 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 108.74 ரூபாயில் இருந்து 112.04 ரூபாயாக உயர்ந்துள்ளது, டீசல் விலை 95.13 ரூபாயில் இருந்து 98.24 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசின் தவறுக்காக மக்கள் விலை கொடுக்கப் போகிறார்கள். ரூ.3 விலை உயர்வு எனும் அதிர்ச்சி தற்போது வந்துவிட்டது. மீதமுள்ள தொகையை தவணைகளாக வசூலிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு, தற்போதைய சர்வதேச எரிபொருள் நெருக்கடியோடு, மோடி அரசாங்கத்தில் நிலவும் தலைமைத்துவ நெருக்கடியும், தொலைநோக்குச் சிந்தனையின்மையும், கரைபுரண்டு ஓடும் திறமையின்மையுமே முக்கிய காரணம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடி. இதற்கான விலையை நாட்டு மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விலை உயர்வு தொழில்துறைகள் முதல் குடும்பங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேற்கு ஆசியப் போர் தொடங்கியபோது எல்லாம் நன்றாகவே இருக்கிறது என மத்திய அரசு நாட்டு மக்களிடம் கூறியது. காங்கிரஸ் எழுப்பிய அனைத்து கேள்விகளும் நிராகரிக்கப்பட்டன. உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக அமெரிக்காவிடம் நாட்டின் இறையாண்மையே பிணையமாக வைக்கப்பட்டது. தேர்தலின்போது எல்லாம் இயல்பாகவே இருப்பது போல அரசு நடந்து கொண்டது. இப்போது நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், வீட்டில் இருந்து பணிபுரிதல், எரிபொருள் சேமிப்பு ஆகியவை குறித்து பேசத் தொடங்கி உள்ளார்.

நாங்கள் இரண்டு கேள்விகளை கேட்க விரும்புகிறோம். கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 30 நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டன. அந்த விலக்கு ஆவணத்தில் அமெரிக்கா ஒப்புதல் மற்றம் அனுமதி அளித்தது போன்ற அவமானகரமான வார்த்தைகளை அரசு பயன்படுத்தி இருந்தது. அந்த விலக்குக் காலத்தை மத்திய அரசு நீட்டிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படியானால், அனுமதி கேட்டு யாசிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நாட்டை மோடி கொண்டு வந்தது ஏன்?

இரண்டாவதாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் குறைவாக இருந்தபோது மோடி அரசாங்கம் சாமானிய மக்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்கவில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.43 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது. அவ்வாறு இருக்க, பணவீக்கத்தின் சுமை இப்போது ஏன் மக்கள் மீது திணிக்கப்படுகிறது?” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles