“அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 60 வரை கட்டாய லஞ்சம் “: விருதுநகர் விவசாயிகள் புகார்

“அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 60 வரை கட்டாய லஞ்சம் “: விருதுநகர் விவசாயிகள் புகார்

“Mandatory Bribe of Up to Rs. 60 Per Bag at Government Paddy Procurement Centers”: Farmers Complain

  • பணம் தர மறுக்கும் விவசாயிகளிடம் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது, கல், மண் உள்ளது எனக் கூறி எடை போடாமல் அலைக்கழிப்பதாக புகார்

  • தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் ஒரு பருவத்துக்கு விவசாயிகளிடமிருந்து பல 100 கோடி ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை. 02

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கட்டாய லஞ்சம் வசூல் செய்யப்படுவதாக விருதுநகர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜ பாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு சன்ன ரகம் குவின்டாலுக்கு ரூ.2,545, மோட்டா ரகம் குவின்டாலுக்கு ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வெளிச் சந்தையைவிட அதிக விலை கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்ய வருகின்றனர். கொள்முதல் மையத்தில் 40 கிலோ எடையுள்ள மூட்டைக்கு ரூ.40-ஐ விவசாயிகளிடம் இருந்து கறாராக லஞ்சம் வசூல் செய்து வருகின்றனர். பணம் தர மறுக்கும் விவசாயிகளிடம் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது, கல், மண் உள்ளது எனக் கூறி எடை போடாமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியது: வெளிச்சந்தையை விட நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் அதிகம் கிடைக்கிறது. அதனால்தான், அனைத்து விவசாயிகளும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நாடுகின்றனர். இதை பயன்படுத்தி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.40-ல் இருந்து ரூ.60 வரை கட்டாயமாக லஞ்சம் வசூல் செய்கின்றனர்.

 

விருதுநகர் மாவட்டத்தில் முதல்போக சாகுபடியில் 1 லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு மூட்டைக்கு ரூ.40 என்றால் ரூ.40 லட்சம் சட்டவிரோதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் ஒரு பருவத்துக்கு விவசாயிகளிடமிருந்து பல 100 கோடி ரூபாய் சட்டவிரோதமாக வசூல் செய்யப்படுகிறது.

முதல்வர் விஜய் கடந்த காலங்களில் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வசூல் செய்வதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் முந்தைய ஆட்சிகளில் இருந்ததுபோல் நெல் மூட்டைக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வசூலிப்பது வேதனையாக உள்ளது. முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles