தென் கொரியாவில் பன்முகக் கலாச்சார இருமொழிப் போட்டியில் தமிழக மாணவர் ஆதித் ஐசக் அரோக்கியராஜ் முதலிடம்

தென் கொரியாவில் பன்முகக் கலாச்சார இருமொழிப் போட்டியில் தமிழக மாணவர் ஆதித் ஐசக் அரோக்கியராஜ் முதலிடம்

Tamil Student Adith Isaac Arockiyaraj Wins First Place in South Korea’s Multicultural Bilingual Contest

  • சியோல் ஜாங்கான் தொடக்கப் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவர் ஆதித், கொரியா மற்றும் தமிழ் மொழியில் தனது திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசை வென்று சாதனை

சியோல், செப். 09

தென் கொரியாவில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற 2026 பன்முகக் கலாச்சார இருமொழித் திருவிழாவில், இந்தியாவின் தமிழ் மாணவர் ஆதித் ஐசக் அரோக்கியராஜ் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு போட்டியில் பங்கேற்ற அவருக்கு சான்றிதழுடன் 1,50,000 கொரிய வான் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

சியோலில் உள்ள ஜாங்கான் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் ஆதித், கொரிய மொழியுடன் தமிழிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இந்தப் பரிசை வென்றுள்ளார். அவரது பெற்றோர் முனைவர் அரோக்கியராஜ் மற்றும் சாருமதி ஆவர்.

சியோலில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது தாய்மொழியுடன் கொரிய மொழியிலும் தங்களது அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைப் பகிர்ந்துகொண்டனர். கொரிய வரலாறு, கலாச்சாரம், அறிவியல், பள்ளி வாழ்க்கை, கலாச்சார உறவுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினர்.

சியோல் பன்முகக் கலாச்சாரக் கல்வி ஆதரவு மையம் ஏற்பாடு செய்த இந்த விழாவில், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்லோவாக்கியா, மங்கோலியா, இந்தியா, கஜகஸ்தான், வியட்நாம், பாகிஸ்தான், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர் ஆதித், கொரியாவில் தான் வளர்ந்து கல்வி பயின்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், பள்ளி வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் கொரிய சமூகத்துடனான தனது அனுபவங்களை, “My School Life in Korea” என்ற தலைப்பில் உரையை எடுத்துரைத்தார்.

ஆதித் ஏற்கனவே 2025ஆம் ஆண்டு சியோல் தேசிய கல்விப் பல்கலைக்கழகம் நடத்திய இருமொழிப் போட்டியில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்தி, “தமிழ்–கொரிய கலாச்சார ஒற்றுமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றி மூன்றாம் பரிசை வென்றிருந்தார்.

சியோல் பன்முகக் கலாச்சாரக் கல்வி ஆதரவு மையத்தின் இருமொழித் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு விழாவில், முதல் முறையாக தமிழ் மொழி பதிவு செய்யப்பட்டு பிரதிநிதித்துவ அங்கீகாரம் வழங்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் ஆதித்தின் வெற்றி, தனிப்பட்ட சாதனையாக மட்டுமின்றி, தமிழ் மொழி மற்றும் இந்தியாவின் பண்பாட்டு பன்முகத்தன்மைக்கும் கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles