வடகிழக்கு பருவமழை தீவிரம்; கனமழை, பெருவெள்ளம் : அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து தவிப்பு
Intense Northeast Monsoon; Heavy Rains and Floods: Over 22,000 People in Assam Stranded After Losing Homes and Possessions
-
அருணாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து முடக்கம்
-
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், அந்தந்த மாநிலங்களின் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
குவாஹாட்டி, ஜூன். 30
வடகிழக்கு பருவமழை தீவிரம்; கனமழை, பெருவெள்ளம் : அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து தவிப்பு : வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் தேமாஜி, நல்பாரி, திப்ரூகர், சிரங், லக்கிம்பூர், கோக்ராஜார் மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். 1,690 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்து உள்ளன.

அசாமின் அர்ச்சிபதார் மற்றும் சிமென் சப்பாரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் கனமழை, வெள்ளத்தால் வடகிழக்கில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அசாம் வெள்ள பாதிப்பு குறித்து அந்த மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கனமழையால் அசாமின் தேமாஜி மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் என்னோடு ஆலோசனை நடத்தினார். அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உறுதி அளித்தார்’’ என்றார்.
அருணாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து முடங்கி உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் கெயி பயனார் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்பால் அங்கு சிக்கித் தவித்த 30 சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், அந்தந்த மாநிலங்களின் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.








