Home Blog Page 113

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக வழக்கு பதிந்தது போலீஸ்

  • தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார்.

  • இவரது மரணம் சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு

சென்னை, பிப். 04

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.

‘வீட்டுக்குவந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ முதலான படங்களில் பாடியிருந்தாலும் ‘தீர்க்கசுமங்கலி’ படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

இதையும் படியுங்கள் : சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இந்த வழக்கு சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு

  • சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி.

  • சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பர்.

சென்னை, பிப்.04

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

சென்னை மாநகராட்சியில் ‘டோரன்ட் கியாஸ்’ நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சியில் இதை செயல்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சென்னையில் உள்ள சாலைகள், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிடம் இருப்பதால் இந்த திட்டத்துக்கான நிலையான வழி காட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் -சந்தேக வழக்கு பதிந்தது போலீஸ்

கியாஸ் குழாய் புதை வடம், மற்ற நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.

கல்வெட்டுகள், பாலங்கள், போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட வழி காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் தார் சாலைகள் புதை வடத்தில் கியாஸ் குழாய் இணைப்பு அமைக்க 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகையும், கான்கிரீட் சாலைக்கு ரூ.21.75 லட்சம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும்.

சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்திச்சேனலை காணுங்கள்.

கண் மருந்தில் கலப்படமா? : சென்னை மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை – ஒருவர் பலி எதிரொலி

  • குளோபல் ஃபார்மா நிறுவனம் ஏற்கெனவே தங்களது மருந்துகளை யாராவது வைத்திருந்தால் அதை உடனே திருப்பி அனுப்புமாறு அறிவித்துவிட்டார்கள்.

  • இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படுவதில்லை.

சென்னை, பிப். 04

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் என்ற மருந்தில் கலப்படம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதால்” யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று நுகர்வோருக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடந்துள்ளது.

இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படவில்லை.

அந்தச் செய்தியின்படி, மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு இணைந்து, அந்த மருந்து நிறுவனத்தின் கண்களுக்கான சொட்டு மருந்து குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளன.

இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு, சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மருந்து நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவில் சோதனை நடத்தச் செல்வதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவில் சோதனை நடந்துள்ளது. இரவு 2 மணி வரை சோதனை நடைபெற்றுள்ளது.

நள்ளிரவில் நடந்த சோதனை குறித்து தமிழ்நாட்டின் சுகாதாரத்துறைச் செயலர் செந்தில் குமார் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மூலமாகச் சோதனை நடைபெறுவதற்கு முன்பாகவே குளோபல் ஃபார்மா நிறுவனம் தனது தயாரிப்புப் பணிகளை நிறுத்தி வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

”அமெரிக்க அரசின் தகவல் கிடைத்ததும், குளோபல் ஃபார்மா நிறுவனம் ஏற்கெனவே தங்களது மருந்துகளை யாராவது வைத்திருந்தால் அதை உடனே திருப்பி அனுப்புமாறு அறிவித்துவிட்டார்கள். எங்கள் அதிகாரிகள் சோதனை செய்யச் சென்ற நேரத்தில் அங்கு எந்தத் தயாரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. ஏற்கெனவே தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத மாதிரிகளை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மருந்து தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதே மருந்துகளிலிருந்து மாதிரிகளைச் சோதனை செய்ய எடுத்துள்ளோம்” என்று செந்தில்குமார் தெரிவித்தார்

மேலும், அமெரிக்க அரசின் ஆய்வறிக்கையின் இறுதி முடிவுகளை வைத்துத்தான் குளோபல் ஃபார்மா நிறுவனத்தின் மருந்தில் கோளாறுகள் இருந்ததா என்று உறுதி செய்யமுடியும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் மாதிரிகளைச் சோதனை செய்யும் என்றும் செந்தில் குமார் தெரிவித்தார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, குலோபல் ஃபார்மா பிரைவேட் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.

அதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மருந்துகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை இது தடுத்து நிறுத்தும். உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, நுகர்வோரையும் மருத்துவர்களையும் எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் அல்லது டெல்சாம் ஃபார்மாவின் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் பொருளை வாங்க வேண்டாமென்று எச்சரிக்கிறது.

அதில் பாக்டீரியல் கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கலப்படமான சொட்டு மருந்தைப் பயன்படுத்துவது கண் பார்வையை இழப்பது முதல் இறப்பு வரை கொண்டு செல்லக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

குலோபல் ஃபார்மா நிறுவனம், நிறுவனம் தாமாக முன்வந்து சந்தையிலுள்ள மருந்துகளையும் நுகர்வோர்களிடம் இருக்கும் மருந்துகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

மேலும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “அந்த நிறுவனத்தின் தற்போதைய நல்ல உற்பத்தி நடைமுறை மீறல்கள், பொருத்தமான நுண்ணுயிர் சோதனைகள் இல்லாமை, உற்பத்தியில் சிக்கல்கள் (நிறுவனம் போதுமான பாதுகாப்பு இல்லாமல் பலமுறை பயன்படுத்தும் பாட்டில்களில் கண் மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்கிறது) உள்ளிட்ட காரணங்களால் இந்த மருந்தை திரும்பப் பெறுமாறு“ கூறியதாக தனது அறிக்கையில் தெரிவித்தது.

GLOBAL PHARMA

நேற்று நள்ளிரவில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள், குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னைக்கு தெற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த மருந்து நிறுவனம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் குறைந்தது 55 நோயாளிகளுக்கு நோய்த்தொற்றுகள், கண் பார்வைக் குறைபாடு மற்றும் பாதகமான நிகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் உற்பத்தியாளரின் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் உற்பத்தி ஆலைக்கு, தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம், புதன்கிழமையன்று எஸ்ரிகேர் எல்.எல்.சி மற்றும் டெல்சாம் ஃபார்மா ஆகியவற்றால் அமெரிக்காவில் விநியோகிக்கப்பட்ட காலாவதியாகாத கண் சொட்டு மருந்துகளை நுகர்வோர் மட்டத்தில் தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதையும் படியுங்கள்: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

எஸ்ரிகேர் ஃபார்மா புதன்கிழமையன்று ஓர் அறிக்கையில், கண் சொட்டு மருந்தின் விநியோகம் மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் அதன் உற்பத்தியோடு பாக்டீரியல் கலப்படத்தை “உறுதியாகத் தொடர்புபடுத்தும்” எந்தச் சோதனை குறித்தும் தனக்குத் தெரியாது என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

testing lab

டெல்சாம் ஃபார்மாவின் செய்தித் தொடர்பாளர், “இந்த மருந்து தயாரிப்புகளை கேட்டுக்கொண்டபடி நிறுவனம் அகற்றியுள்ளது. அந்த மருந்துகளில் பாதுகாப்பு முத்திரை உள்ளதாகவும் அவற்றுக்கும் வாடிக்கையாளர்களின் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படுவதில்லை.

குளோபல் ஃபார்மா நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தின் பயன்பாடு என்ன என்றும் அதுபோன்ற கண்சொட்டு மருந்தில் கலப்படம் இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் மருத்துவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

”குளோபல் ஃபர்மா நிறுவனம் குறித்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு மட்டும் மருந்துகளை அனுப்பியுள்ளது என்பதால் நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. குறிப்பாக ‘artificial tears lubricant’ என்ற மருந்தை கண்களில் வறட்சி உள்ள நபர்களுக்குத்தான் பரிந்துரை செய்வோம்.

முதியவர்களுக்குத்தான் இந்த மருந்து அதிகம் பரிந்துரைக்கப்படும். கண்ணீர் சுரக்கும் சுரப்பியில் பிரச்னைகள் இருந்தால் இந்த மருந்து தேவைப்படும். இதை பல மாதங்கள் பயன்படுத்தவேண்டியிருக்கும். ஒருவேளை இந்த மருந்தில் கலப்படம் இருந்தால், ‘கார்னியா’ என்று சொல்லப்படும் விழியின் வெண்படலத்தில் புண் ஏற்படும்,”என்கிறார் பிரகாஷ்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்திச்சேனலை காணுங்கள்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.

  • ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள், வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை

சென்னை, பிப்.04

சென்னை பெருநகர மையப்பகுதியில் வியாபார நிமித்தத்தால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேடு மொத்த அங்காடி வளாகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வளாகத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், உணவு தானியங்கள் விற்பனைக்காக 3,941 கடைகள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து பயன்பெற்று வருகின்றனர்.

இவ்வளாகத்தினை நவீனப்படுத்தி, மேம்படுத்திட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு தலைமையில், நேற்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : அமெரிக்க பென்டகன் மீது ரகசிய பலூன் : உளவு பார்க்கவில்லை சீனா மறுப்பு

இக்கூட்டத்தில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை நவீனமயமாக்குதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறினை களைந்து, சீரான போக்கு வரத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்தல், வளாகப் பகுதியில் உலவிடும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சரிசெய்தல்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து விரிவாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, சென்னை கமிஷனர் சங்கர் ஷிவால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கூடுதல் காவல் ஆணையர் டி.எஸ். அன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

ஈரோடு இடைத்தேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

  • சுயேச்சை வேட்பாளர்கள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல்

  • தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் வேட்பாளர்கள் கொடுப்பேன் – ஆறுமுகம்

ஈரோடு, பிப். 04

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

சில சுயேச்சை வேட்பாளர்கள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனை எடுத்து அவர் சாதாரண உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள்: நித்யானந்தாவுக்கு புளூகார்னர் நோட்டீஸ் : குஜராத் அறிவிப்புக்கு சர்வதேச போலீஸ் மறுப்பு

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்.

எதற்காக விதவை கோலத்தில் வந்தேன் என்றால் கரூரில் குடியரசு தின விழா அன்று டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களைவிட மது குடித்து இறந்தவர்களின் விதவை மனைவிகள் எண்ணிக்கை அதிகம்.

மது குடிப்பவர்கள் எப்பவும் தெளிவாக இருப்பார்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் எனது மனுவை நான் வாபஸ் பெறுவேன் என்றார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில்களுக்கு ரூ.3 கோடி நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

  • புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை  ரூ. 1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கினார்.

சென்னை, பிப். 04

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த கோவில்களின் நிர்வாகமானது பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர் / பொருளாளர் மற்றும் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 கோவில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோவில், முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்கும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில் மற்றும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோவில் எனப்படும் வெண்ணாற்றங்கரை, மேல சிங்கபெருமாள் கோவில், மணிகுன்ற பெருமாள் கோவில் மற்றும் நீலமேகப் பெருமாள் கோவில் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில்களின் வருவாயை கொண்டே இதர கோவில்களின் நிர்வாகம் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

இந்நிதி பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை 1 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கி உள்ளார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ரா.கண்ணன், ந.திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

நித்யானந்தாவுக்கு புளூகார்னர் நோட்டீஸ் : குஜராத் அறிவிப்புக்கு சர்வதேச போலீஸ் மறுப்பு

* கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்யானந்தா அறிமுகப்படுத்தி உள்ளார்.

* நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

புதுடெல்லி, பிப். 04

கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை பிடிப்பதற்காக குஜராத் போலீசார், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இன்டர்போல் மூலமாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.

அவர் எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

அமெரிக்க பென்டகன் மீது ரகசிய பலூன் : உளவு பார்க்கவில்லை சீனா மறுப்பு

 

  • அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல.

  • அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல்-சீனா விளக்கம்

பீஜிங், பிப். 04

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு விவகார அமைச்சகம் கூறியதாவது:- அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல். அது ராணுவ பயன்பாட்டுக்கானதல்ல.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதாகும். மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்பு கொண்டு விளக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வான் பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்தான் என்று சீனா அளித்துள்ள விளக்கத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஏற்க மறுத்து விட்டது.

இதுகுறித்து பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் டைரடர் கூறும்போது, “சீன அரசின் விளக்கம் பற்றி அறிந்தோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும்.

அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி சீன அரசிடம் தூதரக ரீதியிலும் மற்றும் பல்வேறு மட்டங்களிலும் நேரடியாகவே தெரிவித்து விட்டோம்” என்றார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

தமிழ்நாடு தன்னுரிமை கழகம்: புதிய கட்சி தொடங்குகிறார் பழ. கருப்பையா

  • கட்சி கொடி பச்சை நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவத்துடன் இருக்கும்.

  • தற்போது பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளது.

  • முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும்.

சென்னை, பிப் .03

நடிகர் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதல்வராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா புதிய கட்சியை துவங்கி உள்ளார். தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்குவதாக அவர் அறிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கட்சியின் கொடி, கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா. எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். அதிமுக, திமுகவில் செயல்பட்டு வந்த இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டார்.

சமீபகாலமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் செயல்படாமல் இருந்தது. இதுபற்றி கேட்டபோது நான் கட்சியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் பழ கருப்பையா இருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பல கருப்பையா பேட்டியளித்தார். அப்போது அவர் புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். இதுபற்றி பழகருப்பையா கூறியதாவது:

தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்க உள்ளேன். இதற்கான மாநாடு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். கட்சியின் கொள்கை, நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சி கொடியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கட்சி கொடி பச்சை நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவத்துடன் இருக்கும். தற்போது பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதாரங்களை பணம் கொடுத்து கலைப்பதாகவும், திருடன் கொள்ளையடித்த பொருளை அதே இடத்தில் வைத்து விட்டால் தண்டனைக்கு தப்பிக்கலாம் என்பது போல் அவர் நடந்து கொண்டுள்ளார்.

ஹிந்து என்றது விந்திய மாலைக்கு அப்பாற்பட்டு இருந்த இடத்திலிருந்து வந்தது. தமிழர்களுடைய கலாச்சாரம் வேறு, பண்பாடு வேறு. இங்கு சிறு தெய்வம், குலதெய்வம் வழிபாடு தான். மதத்தின் பெயரை வைத்து பாஜக பிரித்தால், அது சூழ்ச்சியில் ஈடுபடுவதாகும். நான் பாஜக, திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி துவங்கி உள்ளேன். திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன” என்றார்.

பழ கருப்பையா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அங்காடித்தெரு படத்தில் அண்ணாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கவனத்தையும் பெற்றார். அதன்பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக வில்லன் கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார். இதுதவிர மேலும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா?- சி.டி.ரவிக்கு சிங்கை ஜி.ராமசச்சந்திரன் பதிலடி

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று சி.டி.ரவி கூறியிருந்தார் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

சென்னை, பிப். 03

ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜக சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் தனித்தனியே சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:-

1972-ல் அதிமுக உருவானபோது எம்.ஜி.ஆர். திமுகவை தீய சக்தி என்று அழைத்தார். அவரது கருத்து 2023-ம் ஆண்டும் மாறவில்லை. தான் உயிருடன் இருந்தவரை ‘அம்மாவும்’ திமுகவை தீயசக்தி என்று அழைத்தார். மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக மந்திரிகள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது.

ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை. இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று கூறிய சி.டி.ரவியின் கருத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கடுமையாக சாடி உள்ளார்.

சி,டி.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா? இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா? இவ்வாறு சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கூறி உள்ளார்.