புவிசார் குறியீடு : நாட்டுச்சர்க்கரை, சித்திரைகார் நெல், கண்ணாடி கத்திரி விண்ணப்பம்

 

ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது.

 

சென்னை, பிப் . 03

உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை ‘காஞ்சிப் பட்டு’ என்று விற்க முடியாது.

தமிழகத்தில் , மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஏராளமான பொருட்களுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி மற்றும் சேலம் கண்ணாடி கத்திரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.


Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles