பொங்கல் இலவச சேலை புதிய ரகம் மாற்றம் : நெசவாளர்கள் போராட்டம்
Protest by Weavers Over Change in Free Pongal Saree Specifications
-
புதிய ரக சேலைக்கு ஏற்ப தறிகளில் மாற்றம் செய்ய ஒரு மாதத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்படுவதுடன், தறிக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவு
-
கூட்டுறவு சங்கங்களுக்கான ரகங்கள் தவிர வேறு சேலை மற்றும் துணிகள் நெசவு செய்யக்கூடாது என்பதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இரு மாதங்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர், ஜூலை. 09
பொங்கல் இலவச சேலை புதிய ரகம் மாற்றம் : நெசவாளர்கள் போராட்டம்: பொங்கலுக்கு அரசு வழங்கும் இலவச சேலையில் தவெக அரசின் புதிய ரகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு மாதங்களாக நூல் வழங்காததை கண்டித்தும் ஶ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட கோரிய தவெக நிர்வாகியிடம், இந்த அரசு வந்ததில் இருந்து வேலை இல்லை எனக்கூறி நெசவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கார்டுக்கு தலா ஒரு வேஷ்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் 4 ஜோடி சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இலவச சேலை மற்றும் சீருடை துணிகள் விருதுநகர், மதுரை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் நெசவு செய்யப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் முகவூர், புனல்வேலி, சேத்தூர், சொக்கநாதன்புத்தூர், சுந்தர பாண்டியம், ஆவாரம்பட்டி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் 29 நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ளன.
இந்த தறிகளில் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கும் சேலை நெசவு செய்யப்படுகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்படவில்லை. இந்த தறிகளில் கூட்டுறவு சங்கங்களுக்கான ரகங்கள் தவிர வேறு சேலை மற்றும் துணிகள் நெசவு செய்யக்கூடாது என்பதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இரு மாதங்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தவெக அரசு பொங்கல் பண்டிகைக்கான இலவச சேலையில் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிட்டு உள்ளது. புதிய ரக சேலைக்கு ஏற்ப தறிகளில் மாற்றம் செய்ய ஒரு மாதத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்படுவதுடன், தறிக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஆகும் என்பதால் நெசவாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.

இதனிடையே, ஶ்ரீவில்லிபுத்தூர், மாயண்டிபட்டி தெருவில் விநாயகர் கோயில் முன்பு 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கங்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, டி.எஸ்.பி பாலசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், முன்பணமாக தறிக்கு ரூ.1,000 வழங்குவதாகவும், ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக கைத்தறித் துறை உதவி இயக்குநர் உறுதி அளித்தை அடுத்து நெசவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள், புதிய ரகத்தை ரத்து செய்து 2027 பொங்கல் பண்டிகைக்கு பழைய ரக சேலை உற்பத்திக்கு நெசவாளர்களுக்கு உடனடியாக நூல் வழங்க வேண்டும். 2 மாத கால வேலை இழப்புக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.
முன்னதாக தவெக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் ராஜபாண்டி போராட்டத்தை கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தியதற்கு, தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எங்களுக்கு வேலை இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சியினர் வெளியேறுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.








