தென் கொரியாவில் இருமொழி திருவிழா: தமிழக மாணவர் ஆதித் ஐசக் சாதனை
Bilingual Festival in South Korea: Tamil Student Adith Isaac Achieves Distinction
சியோல், மே. 02
தென் கொரியாவில் அதிகரித்து வரும் பன்முக கலாச்சாரத்தை போற்றும் வகையிலும், சர்வதேச மாணவர்களிடையே கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சியோல் தேசிய கல்விப் பல்கலைக்கழகம் (Seoul National University of Education) கடந்த செப். 7, 2025 அன்று ‘இருமொழிக் திருவிழா’ (Bilingual Festival) ஒன்றை நடத்தியது.

தலைநகர் நடைபெற்ற இந்த விழாவில் சீனா, ரஷ்யா, டென்மார்க், பிரான்ஸ், ஹங்கேரி, உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டினரிடையே கொரிய மொழியை ஊக்குவிப்பதும், நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர மரியாதையை வளர்ப்பதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விழாவின் ஒரு சிறப்பம்சமாக, தென் கொரியாவில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஆதித் ஐசக் ஆரோக்கியராஜ் (Adith Isaac Arokiyaraj) இதில் பங்கேற்றார். சியோல் ஜாங்கன் தொடக்கப் பள்ளியில் (Jangan Elementary School) பயின்று வரும் இவர், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் கொரிய மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனது உரையை நிகழ்த்தினார்.
தனது உரையில், கொரியா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையேயான உணவு, பண்பாடு மற்றும் மொழி ஒற்றுமைகளை ஆதித் விரிவாக விளக்கினார். குறிப்பாக, பண்டைய கடல்வழி வர்த்தகம் காரணமாக இரு பகுதிகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்புகள் இருந்திருக்கலாம் என்ற ஆழமான கருத்தையும் ஆதித் முன்வைத்தார். இரண்டு நிமிடங்கள் கொரிய மொழியிலும், அடுத்த இரண்டு நிமிடங்கள் தமிழிலும் பேசி அங்கிருந்தோரை வியக்க வைத்தார்.

தென் கொரியாவின் கல்வி மற்றும் கலாச்சார மேடையில் தமிழ் மொழி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கிய தருணமாக இது அமைந்தது. மேலும், கொரிய – தமிழ் ஒற்றுமைகள் குறித்து அவர் தமிழில் கையால் எழுதிய கடிதங்கள் பேனர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த போட்டியில் ஆதித் ஐசக் ஆரோக்கியராஜ் இரண்டாம் பரிசு பெற்றார். ரஷ்ய மாணவியுடன் இப்பரிசைப் பகிர்ந்து கொண்டார். இதில் முதலிடத்தை சீன மாணவர் பெற்றார். உலகின் மூத்த செம்மொழியான தமிழ், தென் கொரியா போன்ற ஒரு சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.



