கர்நாடகாவில் மேகவெடிப்பு- கனமழை: 9 பேர் உயிரிழப்பு – நிலைகுலைந்த பெங்களூரு நகரம்
Cloudburst and Heavy Rains in Karnataka: 9 Dead – Bengaluru City Paralyzed
-
பெங்களூரு சிட்டியில் 111 மி.மீ மழை பதிவாகி புதிய சாதனை
-
ஐஐஎம் பெங்களூரு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அமைந்துள்ள முக்கிய சாலைகள் முழங்கால் அளவு தண்ணீரில் மிதக்கின்றன
பெங்களூரு, ஏப். 30
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 29) மாலை பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பித்துள்ளது. பல்வேறு விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை சுவர் இடிந்து கோர விபத்து :
சிவாஜி நகர் பகுதியில் உள்ள போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு ஒதுங்கி நின்றவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, நகரின் வேறு இரு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர்.

10 ஆண்டுகளில் இல்லாத சாதனை மழை!
பெங்களூருவில் ஏப்ரல் மாதத்தில் பெய்த மிக கனமழை இதுவாகும்.
பெங்களூரு சிட்டியில் 111 மி.மீ மழை பதிவாகி புதிய சாதனையை படைத்துள்ளது. மத்திய வர்த்தகப் பகுதியில் 78 மி.மீ மழையும், பலத்த ஆலங்கட்டி மழையும் பதிவாகியுள்ளது.
பாதிப்பு:
நகரம் முழுவதும் சுமார் 226 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதில் 92 மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.சர்க்கிள் சுரங்கப்பாதை: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐ டி ஊழியர் ஒருவர் உயிரிழந்த அதே சுரங்கப்பாதை மீண்டும் முழுமையாக நீரில் மூழ்கியது.
பன்னர்கட்டா சாலை:
ஐஐஎம் பெங்களூரு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அமைந்துள்ள முக்கிய சாலைகள் முழங்கால் அளவு தண்ணீரில் மிதக்கின்றன. முறையான வடிகால் வசதி இல்லாததே இதற்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புத்தகக் கடை சோகம்:
சர்ச் ஸ்ட்ரீட்டில் உள்ள புகழ்பெற்ற ‘புக்வோர்ம்’ (Bookworm) கடைக்குள் வெள்ளம் புகுந்ததில், சுமார் 5,000 அரிய புத்தகங்கள் சேதமடைந்துள்ளன.

தற்போதைய நிலை:
பெங்களூரு தெற்கு மாநகராட்சி (BSCC) மற்றும் GBA அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், விழுந்த மரங்களை அகற்றவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய அறிவிப்பு: வாகன ஓட்டிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மின் கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.



