கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதல்வர் விஜய் அறிவிப்பு
Memorial to be established in Karur by TVK – Chief Minister Vijay announces
-
பணமா, ஜனமா எனக் கேட்டால்; எனக்கு ஜனம்தான் முக்கியம். விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல எனக் கதறுகிறார்கள்.
-
‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். யார், எந்த கட்சி என்று கூட சொல்லவில்லை
கரூர், ஜூலை. 10
கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதல்வர் விஜய் அறிவிப்பு: “நம் அனைவருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார்.
கரூரில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில், “ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும், சில காயங்களை, வலியை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்.
பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?
நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துவிட்டது போலீஸ்தான், இப்படி நடந்தால் அப்படிச் செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படிச் செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்? கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தனர்.

நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா?
நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால்; எனக்கு ஜனம்தான் முக்கியம். விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல எனக் கதறுகிறார்கள்.
விஜய் ஏன் அதைப் பற்றி பேசவில்லை, இதைப் பற்றி பேசவில்லை என்கிறார்கள். பாட்டுக்கு பாட்டு கச்சேரி பண்ண எங்களுக்கும் தெரியும். பண்ணலாமா! என்னை பேசு பேசு என்று சொல்கிறார்கள்; ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள்.
‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். யார், எந்த கட்சி என்று கூட சொல்லவில்லை; அவர்கள் ஓடிவிட்டனர். ‘என் அப்பா பீரோவுக்குள் இல்லை’ என சொல்லுகிறார்கள். இவர்களுடன் ஒரே கூத்தாக இருக்கிறது. ‘குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்’. 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். இதுக்கும் மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.
பேசி, பேசி பிரச்சினையை வளர்த்துக் கொண்டு, பிறர் மீது பழியை போட்டுவிட்டு, மக்களை தெருவில் அம்போ என விடும் அரசியல் எனக்குத் தேவையில்லை, செய்யப்போவதும் இல்லை. ‘டாக் லெஸ், வொர்க் மோர்’ இது தான் நமது பாலிசி.
கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் செக்கப்-க்கு சென்றுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள். அவர்கள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா?
நம்ம ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்கிறார்கள். சோஃபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான்.
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர முடியாது எனச் சொல்லுங்கள்; நான் இருக்கிறேன் உங்களுடன். அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
நான் கரூருக்கு போகக் கூடாது என கட்டுப்பாடு போட பார்த்தனர். இது திமுக ஆட்சி இல்லை. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும், தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். வர இருக்கும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை வெளுத்து விடுங்கள்” என்று விஜய் பேசினார்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.








