மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது – பிரதமரிடம் தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை
Permission Must Not Be Granted for Mekedatu Dam Project — Tamil Nadu Chief Minister Vijay Requests Prime Minister
-
அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்
-
வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்
சென்னை, மே 27
தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (மே 27) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் பழனிசாமி; அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொறடா: சபாநாயகரிடம் கோரிக்கை கடிதம்
மேலும், மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்துக்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் பிரதமர் அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026-ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







