அதிமுக உடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை ; சி.வி.சண்முகம் குற்றம்சாட்டிற்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
DMK-AIADMK Alliance Talks: R.S. Bharathi Hits Back at C.V. Shanmugam’s Allegations
-
220 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக கூட்டணியின் சாதனையை இன்னும் யாரும் உடைக்கவில்லை.
-
சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு போவதற்கு ஏதேனும் காரணம் வேண்டும் என்பதற்காக எங்களை கைகாட்டிவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்
சென்னை, மே. 12
அதிமுக உடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக உடைவதற்கு எங்களை கைகாட்டுவது என்பது திசைதிருப்பும் செயல் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என்பதை தெளிவுப்படுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர் கொளத்தூர் தொகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்.
திமுகவை பொறுத்தவரை இந்த 77 ஆண்டுகால வரலாற்றில் பல வெற்றிகளையும் பல தோல்விகளையும் பார்த்திருக்கிறோம். 220 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக கூட்டணியின் சாதனையை இன்னும் யாரும் உடைக்கவில்லை. அதேபோல 1991 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் தான் நாங்கள் வெற்றி பெற்றிருந்தோம். வெற்றியைக் கண்டு வெறிகொண்டவர்களாகவும் நாங்கள் ஆடவில்லை. தோல்வியைக் கண்டு துவண்டுவிடவும் இல்லை.

எனவே சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு போவதற்கு ஏதேனும் காரணம் வேண்டும் என்பதற்காக எங்களை கைகாட்டிவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். அவர் தொடர்ந்து பதவிலேயே இருந்தவர். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோற்றபிறகும் கூட ராஜ்ய சபா எம்.பி. ஆகிவிட்டார். சிலருக்கு பதவி வெறி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் காங்கிரஸிலும், பாஜக ஆட்சியில் இருந்தால் பாஜகவிலும் கட்சி மாறுகிற கலாச்சாரம் வடநாட்டில் தான் இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் இந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று தெளிவாக சொல்லிவிட்டார். எனவே அதிமுக உடைவதற்கு எங்களை கைகாட்டுவது என்பது திசைதிருப்பும் செயல். அவர்கள் போகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் திமுக – அதிமுகவை எதிர்த்துதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இப்போது அதிமுகவை சேர்ந்தவர்களை தன்னுடன் சேர்க்கப் போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை- சென்னை உயர் நீதிமன்றம்
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்த 53 ஆண்டு காலமாக அக்கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறோம். இந்தச் சூழலில் எங்கள் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், எந்த திமுகவை நாங்கள் எதிர்த்து வந்தோமோ அந்த திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராக்க தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாமும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பழனிசாமி கூறினார். இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்க வில்லை.
நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்குள்ளானோம். அப்படி திமுக உடன் இணைந்தால் அதிமுகவே இல்லாமல் போய்விடும் என்று சொன்னோம்.” என்றார். மேலும் சி.வி.சண்முகம் தலைமையில் 31 அதிமுக உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







