திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை- சென்னை உயர் நீதிமன்றம்
The Madras High Court issued an interim order barring TVK MLA Srinivasa Sethupathi
-
தேர்தல் வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்தான் அத்தொகுதியின் தேர்தல் வெற்றி செல்லுமா, செல்லாதா என்பதை தீர்மானிக்கும்
-
தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கற்பனையாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது
சென்னை, மே. 12
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்தார் அதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என அவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “எனது தொகுதிக்கு பதிவான ஒரு தபால் வாக்கை அதிகாரிகள் தவறுதலாக வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டனர். எனவே அந்த தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஞாயிறன்று விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் அமர்வு, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தாக்கல் செய்த பதில்மனுவில், “தேர்தல் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குதான் தொடர முடியும். அந்த தேர்தல் வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்தான் அத்தொகுதியின் தேர்தல் வெற்றி செல்லுமா, செல்லாதா என்பதை தீர்மானிக்கும். அதைத் தவிர்த்து ரிட் வழக்கு தொடர்ந்து இதற்கு பரிகாரம் தேட முடியாது. இதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை வேறு தொகுதிக்கு அனுப்பி வைக்கவும் முடியாது. அதேபோல தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை நடத்தக் கோரும் மனு மீது முடிவெடுக்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை.

ஒரே பெயர் கொண்ட தொகுதிகளுக்கான வாக்குகளை கையாளும்போது தேர்தல் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தபால் வாக்குகளில் தொகுதி எண் குறிப்பிடப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கற்பனையாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரி இருந்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலனும், பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், நம்பிக்க வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







